அணு உலையில் பெரும் வெடிப்பு! ஜப்பானில் அச்சம்
, சனி, 12 மார்ச் 2011 (16:44 IST)
ஜப்பானை ஒட்டிய கடற்பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால் செயலிழந்த டாய்ச்சி அணு உலையில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டதையடுத்து, அணுக் கதிர் வீச்சு அபாயத்தால் ஜப்பானை பெரும் அச்சம் சூழ்ந்துள்ளது.
ஜப்பானின் கிழக்குக் கரையில் உள்ள ஃபுகுஷிமா எனுமிடத்தில் உள்ளது டாய்ச்சி அணு மின் சக்தி நிலையம். இங்கு மூன்று அணு உலைகள் உள்ளன. இந்த நிலையத்தை டோக்கியோ மின்சார வாரியம் இயக்கி, பராமரித்து வருகிறது. நேற்று மதியம் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தினால் இங்குள்ள அணு மின் உலைகள் செயலிழந்தன. அணு உலைகள் செயலிழந்த நிலையில், அதிலுள்ள யுரேனிய அணு எரிபொருளால் உருவாகும் வெப்பத்தைத் தணிக்க வேண்டிய குளிரூட்டு இயந்திரங்கள், பூகம்பத்தினால் ஏற்பட்ட மின் தடையால் செயலிழந்தன. இதனால் அணு உலையின் வெப்பம் அதிகரித்து, கதிர் வீச்சு வெளியேறத் தொடங்கியது.அணு மின் நிலையம் இருந்த பகுதியைச் சுற்றி 10 கி.மீ. பரப்பளவில் வாழும் மக்கள் அனைவரும் இன்று காலை வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் இன்று மதியம் அந்த அணு மின் நிலையத்தில் மின்னல் போன்ற ஒளியுடன் பெரும் வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் அணுக் கதிர் வீச்சு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது ஜப்பான் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.டாய்ச்சி அணு மின் நிலையத்தில் இருந்த ஒன்றாவது, இரண்டாவது அணு மின் நிலையங்களில் ஏதாவது ஒன்றில் அணு எரிபொருள் அதிக வெப்ப நிலையில் உருகி இந்த வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று பொறியாளர்கள் கூறியதையடுத்து, ஃபுகுஷிமா நகரில் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார் பிரதமர் நவோட்டோ கான். அவசர நிலை பிரகடனத்தையடுத்து, கதிர் வீச்சை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக முடிக்கி விடப்பட்டுள்ளது.