குண்டு சத்தம் ஓய்ந்தது- இஸ்ரேல், பாலஸ்தீன மக்கள் நிம்மதி
, வியாழன், 22 நவம்பர் 2012 (09:40 IST)
இஸ்ரேல் - ஹமாஸ் இயக்கத்தினர் இடையே காஸா பகுதியில் ஒரு வாரத்திற்கு மேலாக நீடித்த சண்டையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் இருதரப்பினருக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் நிகழ்ந்த தாக்குதல் சம்வங்களை முடித்துக் கொண்டு காஸா பகுதியில் அமைதி திரும்ப இரு தரப்பும் முன் வந்துள்ளன. அதன்படி 2012 நவம்பர் 21 ஆம் தேதி உள்ளூர் (இஸ்ரேல்)நேரப்படி இரவு 9 மணியில் இருந்து போர் நிறுத்தம் அமலானது.பாலஸ்தீனின் காஸா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத் தலைவர் கொல்லப்பட்டதையடுத்து, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சண்டை நடைபெற்று வந்தது.இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 140 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். அதேபோல், ஹமாஸ் அமைப்பினரின் ஏவுகணைத் தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பில் 5 பேர் பலியாகினர். இந்தச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்-கீ-மூன், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.அதற்கு பலனளிக்கும் வகையில், இஸ்ரேலும், ஹமாஸ் இயக்கமும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. இது குறித்த அறிவிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹலரி கிளிண்டன் முன்னிலையில் எகிப்து வெளியுறவு அமைச்சர் மொஹமத் வெளியிட்டார்.கடந்த 8 நாட்களாக நீடித்த தொடர் சண்டை, நிறுத்தப்பட்டிருப்பதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் வரவேற்பு தெரிவித்துள்ளார். வரும் காலங்களிலும் அமைதி நிலை தொடர இரு தரப்பும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு முக்கிய பங்காற்றிய எகிப்து அதிபர் முர்ஷியை , அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார். சண்டை நிறுத்த அறிவிப்புக்கு ஐ.நா.வுக்கான பலஸ்தீன தூதர் ரியாட் மான்சுர் வரவேற்பு தெரிவித்துள்ளார். அதேபோல், இஸ்ரேஸ் மக்களும் சண்டை நிறுத்தத்திற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.