நவராத்திரியின் ஐந்தாம் நாளான செவ்வாய்க்கிழமை அம்பிக்கையை வளர்ச்சிக்கு வழி காட்டும் வைஷ்ணவியாக அலங்கரிக்க வேண்டும்.
வீட்டில் தீபத்தை ஏற்றி வழிபடுவதன் மூலம் தெய்வாம்சத்தை நம் இல்லத்தில் குடிகொள்ள வைப்பவள் திருமகள். அந்த திருமகளை வைஷ்ணவி வடிவத்தில் வணங்க வேண்டும்.
சும்ப நிசும்பர்கள் அனுப்பும் தூதுவன் வந்து சொல்வதை அன்னை சுகாசனத்தில் வீற்றிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
மஹிஷாசுர வதத்திற்கு பிறகு ஒரு சமயம், சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரத் தலைவர்கள் தேவர்களுக்கு பெரும் தொல்லை விளைவித்தனர். தேவர்களும், முனிவர்களும் சென்று, விஷ்ணு மாயையாகிய தேவியை பல வாசம் துதித்து சிவசக்தியாகிய பார்வதி தேவியைச் சரணடைந்தனர். பத்ரகாளியாக உருவெடுத்த சிவசக்தி தென் இமயமலையில் அழகிய பெண்ணுருவெடுத்து தேவர்களைக் காக்க பல்வேறு அழகிய ரூபத்தில் வெளிப்பட்டாள். சும்பன், மதி மயங்கி தன் தூதுவனான சுக்ரீவனை தேவியிடம் தன் பெருமைகளைக் கூறி அவனை மணக்க வேண்டுகிறான். தேவியோ தன்னுடன் போரிட்டு எவர் தன்னை வெல்கிறார்களோ, அவரைத் தான், தான் மணப்பதென்று உறுதி பூண்டிருப்பதாகக் கூறுகிறாள். தேவர்களே அஞ்சி நடுங்கும் தன் தலைவரின் பெருமை புரியாமல் தேவி இப்படிப் பேசுவதாகக் கூறி மிகுந்த கோபத்துடன் சும்ப நிசும்பர்களிடம் தெரிவிக்க திரும்பிச் செல்கிறான்.இன்றைய தினம் கொலு மண்டபத்தில் காளி, துர்கை, அனுமன், நந்தி பொம்மைகள் அதிகம் இடம்பெற வேண்டும். வைஷ்ணவிக்கு காய்கறி மாலை, பழ மாலை, மாணிக்க மாலை, முத்து மாலை ஆகியவற்றை அணிவிக்கலாம். பஞ்சமாவரணை கீர்த்தனைகளைப் பாட வேண்டும். அம்பிகையின் பாடல்களை பந்துவராளி ராகத்தில் பாட வேண்டும்.மாலை 6 மணி முதல் இரவு 7 மணிக்குள் பூஜை செய்வது சிறந்தது. 21 தீபம் ஏற்றுவது நல்ல பலனைத் தரும்.கதம்பம், மனோ ரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும். முல்லை, செவ்வந்தி, பாரிஜாத மலர்களை மாலையாக்கி அணிவிக்கலாம். சர்க்கரைப் பொங்கல், கடலை பருப்பு வடை, பாயசம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல், தயிர் சாதத்தை பிரசாதமாக கொடுக்கலாம். கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.