நம் தஞ்சாவூர் ஓவியங்களைப் போலவே வட இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் தோன்றிய பாரம்பரியம் மிகுந்த ஓவியக்கலை `மதுபனி ஓவியங்கள்‘ என்று இன்று உலகப் புகழ் வாய்ந்தவையாக விளங்குகின்றன.
`மதுர் பன்‘ என்பதற்கு `செழிப்பான காட்டுநிலம்‘ என்று பொருள். இவ்வகை ஓவியங்கள் மைதிலி ஓவியங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. கலை ஆர்வலர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள மதுபனி ஓவியங்கள் கலைநுணுக்கங்களில் சில மாறுதல்களை ஏற்றுக்கொண்டிருந்தாலும் உலகின் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படும் அளவிற்கு பரவலாகப் புகழ் பெற்றவை.
இவ்வகை ஓவியங்களுக்கான அடிப்படைக் கருத்து, புராணம், மற்றும் வரலாற்றுக் கதைகளிலிருந்து எடுக்கப்படுகின்றன. ராதாகிருஷ்ணர், பிள்ளையார், அர்த்தநாரீச்வரர் போன்ற ஓவியங்கள் மிகுதியாகக் கையாளப்படுகின்றன. வண்ணங்களின் மாயாஜாலம் ஓவியங்களின் பெருமைக்கு ஒரு காரணம். பெரும்பாலும் இயற்கை வண்ணங்களே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், இன்று வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கும் ஓவியங்களில் நீண்ட நாள் மங்காமலிருப்பதற்காக ரசாயன வண்ணங்களான இங்க் வகைகளைப் பயன்படுத்துகின்றனர்.
ஒரு காலத்தில் சுவர்களில் வரையப்பட்டிருந்தாலும், இன்னும் சுவர் போன்ற தோற்றத்தைக் கொடுப்பதற்காக ஓவியம் வரையப்படும் காகிதத்தை பசும் சாணம் கரைத்த நீரில் தோய்த்தெடுத்துப் பின்காய வைத்து அதன் மீது ஓவியங்கள் வரைந்து வண்ணம் தீட்டுவது என்பதும் வழக்கத்திலுள்ளது. பழமை விரும்பிகளாக சில அயல்நாட்டுக் கலை ரசிகர்கள் இன்றும் இப்படித் தயாரிக்கப்பட்ட ஓவியங்களை வாங்கிச் செல்கின்றனர்.
தரையின் மீது அரிசி மாவை உபயோகித்து ஆல்பனா (அ) ஆரிபனா என்ற பெயரிலும் இவ்வகை ஓவியங்களை உருவாக்குவது வழக்கம். திருவிழா மற்றும் பண்டிகைக் காலங்களில் அவற்றிற்குப் பொருத்தமான சித்திரங்களை வரைந்து தம் கலை ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர். பெண்கள் வழி வழியாகக் கற்று இவ்வகை ஓவியக்கலை அழியாமல் பாதுகாத்து வருகின்றனர். அவற்றை விற்று வருவாய் தேட உதவுகின்றனர் ஆண்கள்.
புதுமணத் தம்பதிக்கு ஆசி வழங்கும் வகையில் கோபர் (Kohbar) என்ற பெயரில் கடவுள் உருவங்கள், கோள்கள் (planets) மற்றும் பிற உயிரினங்களும் ஒன்று கூடி திருமணத்தை நடத்தி வைப்பதாக வெல்லாம் தத்ரூபமாகச் சித்தரிக்கப் படுவது மதுபனி ஓவியங்களின் சிறப்பு.
ராமாயணக் கதைகள், ராதா-கிருஷ்ணர் காதல் ஓவியங்கள், இந்துக் கடவுள்கள் போன்றவை வரையப்பட்டாலும் `சூந்த்ரிக்‘ வகை ஓவியங்களில் அந்தந்தக் கடவுளுக்கே உரிய யந்திரங்களுடன் சிறப்பாகச் சித்தரிக்கப்படுகின்றன. மரங்கள், பூக்கள், பறவைகள், மிருகங்கள் போன்றவை பின்னணியில் இடம் பெறுவது ஓவியங்களுக்கு மேலும் அழகூட்டுகின்றது.
செய்முறை விளக்கம்
இப்போது, இந்த மதுபனி ஓவியங்களை வீட்டிலேயே வரைவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாமா?
தேவையான பொருட்கள்:
1. வரைவதற்குத் தேவையான இங்க் (மை) - 12 வண்ணங்களடங்கிய ஒரு செட்.
2. லான்சன் காகிதம் (Lanson Paper) ஒரு முழு ஷீட் (சுமார் 1 சதுர மீட்டர்) இதன்விலை சுமார் ரூ.80 இருக்கும். ஓவியத்தின் அளவிற்குத் தகுந்தாற்போல் வெட்டிக் கொள்ளலாம்.
3. ஓவியத்தின் கோடுகளை வரைய நிப் (Nib) அல்லது பௌண்டன் பேனா (Fountain Pen) இந்த இரண்டில் ஒன்றை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
4. பிரஷ் எண் 0 மற்றும் 1.
5. வண்ணங்கள் எங்காவது தேவையில்லாமல் பட்டுவிட்டால், துடைக்க ஒரு கைத்துணி.
செய்முறை:
1. ஓவியம் வரையப் போகும் ஓவியத்தைத் தேர்ந்தெடுத்த பின், அதற்குத் தேவையான அளவிற்கு (பிரேம் செய்ய சுமார் 1" இடைவெளி விட்டு) காகிதத்தை வெட்டிக் கொள்ள வேண்டும்.
2. அடிப்படை ஓவியத்தை வரைவதற்கு இரண்டு முறைகள் உள்ளன.
(i) ஓரளவு ஓவியம் வரையக் கற்றுக்கொண்டவர்கள் கருப்பு மை (ink) ஐப் பேனாவில் நிரப்பியோ அல்லது நிப்-ஐக் கொண்டோ நேரடியாகக் காகிதத்தில் வரையலாம்.
(ii) டிரேஸ் செய்த ஓவியத்தின் பிரதியைக் காகிதத்தின் மீது வெள்ளைக் கார்பன் காகிதத்தை வைத்து அதில் வரைந்து கொள்ளலாம்.
கார்பனை எடுத்துவிட்டு, நிப்-ஆல் எல்லைகளை வரைந்து கொள்ளலாம். இதற்கும் கருப்பு நிற இங்க்கையே பயன்படுத்த வேண்டும்.
3. இப்படி நிப்-ஐப் பயன்படுத்தும்போது அடிக்கடி அதை நீரில் சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும். பட்டை தீட்டுவது போல் இல்லாமல் ஒரே சீராகக் கோடுகள் விழ இது உதவும்.
4. ஓவியத்தின் எல்லைக் கோடுகளை (out lines) வரைந்த பின்பு, தேர்ந்தெடுக்கும் வண்ணங்களை பிரஷ் மூலம் ஓவியத்தின் மற்ற பாகங்களுக்குச் சீராக நிரப்ப வேண்டும்.
வண்ணங்கள் காய்ந்த பின்பு பிரேம் செய்யக் கொடுக்கலாம். சுமார் 30" x 18" உள்ள ஓவியத்திற்கு தரமான பிரேம் செய்ய ரூ.300 ஆகும். ஓவியத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும், ஸ்டேஷனரி கடைகளில் கிடைக்கும். பொறுமையாகத் தேர்ந்தெடுத்து வரைந்தால் கலை வண்ணம் மிக்க மதுபனி ஓவியம் தயார்.
நாமாகவே கற்று ஓர் ஓவியத்தை உருவாக்கும் போது கிடைக்கும் மன நிறைவும் மகிழ்ச்சியும் தனியல்லவா?