மகளிர் முன்னேற்றம் மலரட்டும், பெண்ணடிமை தீரட்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா: மகளிர் தினம் என்பது பெண் விடுதலையின் முதல் படி என்று சொன்னால் அது மிகையாகாது. பெற்ற உரிமைகளை பேணிக் காக்கவும் பெற வேண்டிய உரிமைகளுக்காக போராடவும் பெண்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் நாள் மகளிர் தினம் ஆகும்.'
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?' என்னும் நிலை மாறி 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினால் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்!' என்று சொல்லும் அளவிற்கு இருபதாம் நூற்றாண்டில் மகளிர் முன்னேற்றம் தொடங்கியது.''
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி, இவ்வையம் தழைக்குமாம்'' என்ற பாரதியின் வாக்கிற்கிணங்க மகளிர் முன்னேற்றம் மலரட்டும். பெண்ணடிமை தீரட்டும். பெண்ணுரிமை வாழட்டும் என்று வாழ்த்தி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி உலகம் முழுவதிலும் உள்ள அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்: ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்பது ஏட்டில் தான் உள்ளது. 1941ஆம் ஆண்டில் 1000 ஆண்களுக்கு 1047 பெண்கள் என்ற விகிதம் இருந்தது. 2001ஆம் ஆண்டில் அது 921ஆக குறைந்துவிட்டது. கருவிலேயே கண்டுபிடித்து பெண் கருக்களை கலைப்பதும், குழந்தை பிறந்த உடன் பெண் குழந்தைகளைக் கொல்லுவதுமே இதற்குக் காரணம்.பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும். குற்றங்கள் பெருகி வருகின்றன. உதாரணமாக ஈவ்டீசிங், கடத்தி கற்பழித்து கொலை செய்வது, வரதட்சணை கொடுமை போன்ற குற்றங்கள் இழைக்கப்படுவது உடனடியாக கண்டுபிடித்து அரசு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்.உலக மகளிர் தினத்தன்று அனைத்து தரப்பினரும் மகளிருக்கான மேம்பாட்டை உருவாக்க பாடுபட வேண்டுமென்றும், உண்மையிலேயே ஆண்களுக்கு நிகர் பெண்கள் சமம் என்ற நிலை நாட்டிலே ஏற்பட வேண்டுமென்று எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்: ஆணுக்குப் பெண் இளைத்தவரல்ல என்று நிரூபிக்கும் வகையில்அனைத்துத் துறையிலும் பெண்கள் ஈடுபட்டு முன்னேறி வருகின்றனர். ஆயினும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளும், குற்றங்களும் நீக்கப்பட வேண்டும். அவர்களுக்கு மேலும் முழு சுதந்திரம் கிடைத்திட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.சுயதொழில் மற்றும் தொழில் முனையும் பெண்களுக்கு மேலும் பொருளாதார ரீதியான சலுகைகள் கூடுதலாக கிடைக்கச் செய்ய வேண்டும். நீண்ட நாளாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நாளை எந்தவித எதிர்ப்பும் இன்றி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறுமேயானால் அதுவே இந்த ஆண்டு உலக மகளிர் தினத்தையொட்டி இந்திய மகளிருக்கு அளிக்கப்படும் சிறந்த பரிசாகும்.உலக மகளிர் தினத்தையொட்டி அனைத்து சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.