காய்கறிகள் விக்கிற விலையில் அவியல் எல்லாம் எப்படி செய்ய முடியும் என்று கேட்காதீர்கள். உங்களுக்கு அவியல் செய்வதும் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் எங்களது முயற்சி.
தேவையானவை
பீன்ஸ் - 100 கிராம்
அவரைக்காய் - 100 கிராம்
பட்டாணி - 100 கிராம்
கத்தரிக்காய் - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பெரிய வெங்காயம் - 100 கிராம்
புடலங்காய் - 1 துண்டு
வாழைக்காய் பெரியது - 1
கார கருணை - 150 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
பச்சை மிளகாய் - 5
தேங்காய் மூடி பெரியது - 1
தேங்காய் எண்ணெய் - 50 மி.லி.
கெட்டித்தயிர் - 100 மி.லி.
மாங்காய் - 1
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு - சிறிதளவு
செய்முறை :
காய்கறிகளைய நன்றாக கழுவி தனித்தனியாக நீள, நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நமது சுண்டு விரல் நீள அகலத்திற்கு எல்லாவற்றையும் நறுக்கவும்.
முதலில் கார கருணைத் துண்டுகளை சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும். அரை வேக்காடு வந்தவுடன், மாங்காய் தவிர, எல்லாக் காய்கறிகளையும் போட்டு வேக விடவும். தண்ணீர் அரை டம்ளர் போதுமானது.
தேங்காயைத் துருவி, அதனுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, ரொம்பவும் நைசாக அரைத்து விடாமல் எடுத்து வெந்து கொண்டிருக்கும் காய்கறிகளுடன் சேர்க்கவும்.
காய்கறிகள் நன்கு வெந்ததும் மாங்காயை போட்டு, உப்பு அளவாய் போட்டு கரண்டிக்காம்பால் கிளறவும். தேங்காய் எண்ணெயை ஊற்றி கிளறி இறக்கி சில நிமிடங்கள் கழித்து தயிரை ஊற்றிக் கிளறவும்.
மிகச் சுவையான காய்கறி அவியலான இதனை விருந்திலும், அடைக்குத் தொட்டுக் கொள்ளவும் மோர் சாதம், பழைய சாதத்திற்கும் கூட சூடாக, தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.