சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு ஐந்து மொழிகளில், எழுதும் முறைக்கு நேர்எதிர் திசையில் எழுதும் தனித்திறனைகோவை மாணவி அன்சி ஆபிரகாம் பெற்றுள்ளார். இது அவரின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூறப்படுகிறது.
கோவையைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம், பிரென்ச் ஆகிய மொழிகளில் எழுதும் முறைக்கு மாறாக எதிர்நிலையில் எழுதும் திறனைக் கொண்டுள்ளார். குழந்தைப் பருவத்தில் இடது கைப்பழக்கம் இருந்த நிலையில் தனது தாயாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் வலது கையால் எழுதத் தொடங்கியுள்ளார். இடது கையால் எழுதுவதையும் விட்டுவிட்டார்.
பின்னர் தோழிகளின் ஆலோசனைப்படி மீண்டும் இடது கையால் எழுதத் தொடங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து தோழிகள் கூறியது போன்று எதிர் திசையில் எழுதிப் பார்க்கத் தொடங்கியுள்ளார். இந்த முறையை கண்ணாடி எழுத்து முறை என்று கூறுவார்கள். விரைவிலேயே அவ்வாறு எழுத கற்றுக் கொண்ட நான், வேகமாகவும் அதனைத் தொடர்ந்து பிற மொழிகளையும் அவ்வாறே எழுத கற்றுக் கொண்டேன் என்று அன்சி ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
இன்னும் பல மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள அன்சி ஆபிரகாம், ஒரே நேரத்தில் இரு கைகளாலும் இருவேறு மொழிகளை எழுத திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். தெலுங்கு, கன்னடம், சில அயல் மொழிகளையும் கற்றுக் கொள்ள ஆர்வத்துடன் உள்ளார். தனது வேடிக்கையை இத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், கண்ணாடி எழுத்து முறையில் எழுதுவதில் உலக சாதனை படைக்க கடினமாக செயல்பட்டு வருகிறார்.
எழுதும் முறைக்கு நேர்எதிர் திசையில் எழுதும் தனித்திறன் என்பது இயற்கையிலேயே கிடைத்த வரம் என்று நம்மில் சிலரும், மூளையில் மொழி தொடர்பான சமிக்ஞையின் ஒருவிதமான அதீத வளர்ச்சி தான் காரணம் என்று வேறு சிலரும் கூறுவது இயல்பான ஒள்றாகும். இந்த திறன் முழுவதும் பயிற்சி அடிப்படையிலேயே உருவானது என்று நரம்பியல் நிபுணர் நடராஜன் தெரிவித்துள்ளார். இது போன்ற எதிர்மறையான எண்ணங்கள் எதுவும் வழக்கமாக மூளையின் உன் பகுதியில் நடைபெறுவது (வளர்ச்சியடைவது) இல்லை என்றும், முழுக்க முழுக்க இது பழக்கத்தின் அடிப்படையில் வந்துள்ளது என கூறியுள்ளார்.