செஸ் பாடமும் அதை விளையாடுவதும் குழந்தைகளின் பண்பை மேம்படுத்துவதாக அப்ரீடீன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
செஸ் விளையாட்டை விளையாடும் இளம் வயதினரின் மூளை நுட்பமாகவும், அவர்களின் பண்புகள் மேம்பட்டுக் காணப்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இநத விளையாட்டை மேற்கொள்ளாதவர்கள் சற்று பின்தங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அது எப்படி என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழுவது இயற்கைத்தான். செஸ் விளையாட்டில் ஈடுபடுவதற்கு முன்பும், ஈடுபட்டதற்கு பின்னரும் ஒருவருடைய வாசிக்கும் திறனில் வித்தியாசம் காணப்படுகிறது. இந்த விளையாட்டை விளையாடத் தொடங்கிய பின்னர் ஒருவரின் வாசிக்கும் திறன் அதிகரித்து காணப்படுகிறது என்று டாட்பாரஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஆனால் இது எவ்வாறு நடக்கிறது என்பது தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். செஸ் விளையாட்டில் ஈடுபடுவதற்கும், வாசிக்கும் திறன் அதிகரிப்பதற்கும் இடையே உள்ள தொடர்புக்கும் சமூக பார்வையும் ஒர் காரணமாக உள்ளது. செஸ் போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் ஒருவர் அதிகப்படியான பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் சமூகத்தில் பலதரப்பு மக்களிடம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும், தன்னம்பிக்கையை உருவாக்கவும் இது உதவுகிறது.
அப்ரீடீன் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட இரண்டு பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பள்ளிகளில் அனைத்து மாணாக்கர்களுக்கும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. சரியாக படிக்காத, பண்பு நலன் குறைந்த மாணவர்களுக்கு பள்ளி நேரம் முடிந்த பின்னர் நடைப்பெறும் செஸ் வகுப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டதில் அவர்களின் கெட்ட பண்புகள் மாறியது தெரிய வந்ததாகவும், ஒட்டு மொத்தத்தில் அந்த மாணவர்களின் நடை உடை பாவனைகளில் மாற்றம் ஏற்பட்டதாகவும் டாட்பாரஸ்ட் கூறியுள்ளார். செஸ் விளையாட்டை விளையாட வேண்டும் என்ற ஆர்வமும், விருப்பமும் ஒருவரின் பண்பு நலனில் மாற்றத்தை உருவாக்குகிறது என்பதைக் கண்டறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.