பையனூரில் சின்னத்திரை கலைஞர்களுக்கான 1,148 வீடுகள் கட்டுமான பணி நேற்று தொடங்கியது. ராம.நாராயணன், ராதாரவி, ஆர்.கே. செல்வமணி, குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டு கட்டுமான பணியை தொடங்கிவைத்தனர்.
திருப்போரூரை அடுத்த பையனூரில் திரைப்படத் துறையினருக்கு அரசு 96 ஏக்கர் நிலம் வழங்கியிருக்கிறது. இதில் பெப்சி தொழிலாளர்களுக்கு 50 ஏக்கரும், நவீன ஸ்டூடியோ கட்ட 15 ஏக்கரும், தயாரிப்பாளர் சங்கத்துக்கு 10 ஏக்கரும். சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்புக்கு 8 ஏக்கரும் நில் ஒதுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் பையனூரில் நேற்று காலை வீடு கட்டும் பணி தொடங்கியது. 600 சதுர அடியில் 504 வீடுகளும், 800 சதுர அடியில் 280 வீடுகளும், 1,000 சதுர அடியில் 364 வீடுகளுமாக மொத்தம் 1,148 வீடுகளை கட்டுவதற்கான இந்த விழாவில், 1,000 சதுர அடி வீடுகளுக்கான கட்டுமான பணியை திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ராம.நாராயணன் தொடங்கிவைத்தார். 800 சதுர அடிக்கான வீடுகளின் கட்டுமான பணியை `பெப்சி' தலைவர் வி.சி.குகநாதன் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து `ஷாப்பிங் மால்' கட்டுமான பணியை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தலைவர் குஷ்புவும், கிளப் ஹவுசை நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவியும் தொடங்கிவைத்தார்கள். ஆடிட்டோரிய பணியை திரைப்பட இயக்குனர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணியும், உடற்பயிற்சிக்கூட கட்டுமான பணியை சின்னத்திரை தயாரிப்பாளர் சங்க பொதுச்செயலாளர் டி.வி.சங்கரும், பிளாக் `சி' வீடுகளுக்கான கட்டுமான பணியை தயாரிப்பாளர் `சத்யஜோதி' தியாகராஜனும் துவக்கி வைத்தனர்.
விழாவில் சின்னத்திரை கூட்டமைப்பின் தலைவர் விடுதலை கூறுகையில், வரும் ஒன்றரை ஆண்டிற்குள் இந்த வீடுகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடும். 600 சதுர அடி வீடுகள் 6 லட்சத்திற்கும், 800 சதுரஅடி வீடுகள் 12 லட்சத்துக்கும், 1,000 சதுர அடி வீடுகள் 17 லட்சத்துக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது என்றார்.
விழாவில் ராம.நாராயணன் பேசுகையில், இங்கு 15 ஏக்கர் நிலத்தில் கட்டுப்பட்டு வரும் நவீன ஸ்டூடியோவை முதல்-அமைச்சர் கருணாநிதி ஜனவரி மாதம் 14-ந் தேதி பொங்கலன்று திறந்து வைக்க உள்ளார் என்று கூறினார்.