கோடை விடுமுறையை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மெரினா கடற்கரையில் திங்கட்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடை விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வருவதால், காமராஜர் சாலையில், நேப்பியர் பாலம் முதல் கண்ணகி சிலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை கருதியும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. இந்த மாற்றம் திங்கட்கிழமை முதல் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை, கோடை விடுமுறை காலம் முடியும் வரை நடைமுறையில் இருக்கும்.
போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் இடங்கள் :
ஒரு வழிப்பாதை
காந்தி சிலையில் இருந்து வடசென்னையை நோக்கி செல்லும் எல்லா வாகனங்கள், மாநகர பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலை நோக்கி செல்ல அனுமதி கிடையாது. அவ்வாகனங்கள் கண்ணகி சிலையில் இடது புறமாக திரும்பி பாரதி சாலை வழியாக பெல்ஸ் ரோடு சென்று, வலதுபுறம் திரும்பி வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்று அடையலாம்.
வடசென்னையில் இருந்து தென்சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் போர் நினைவு சின்னத்தில் இருந்து காந்தி சிலைக்கு வழக்கம் போல் செல்லலாம்.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பெல்ஸ் சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது. பாரதிசாலை சந்திப்பில் இருந்து செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
வாலாஜா சாலை சந்திப்பு
வாலாஜா சாலையின் ஒரு பகுதி பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து உழைப்பாளர் சிலை வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
பாரதி சாலையின் ஒரு பகுதி கண்ணகி சிலையில் இருந்து பெல்ஸ் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. பெல்ஸ் ரோடு - பாரதி சாலை சந்திப்பில் இருந்து, பாரதி சாலை வழியாக கண்ணகி சிலை நோக்கி செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.