நடிகர் ஆனந்தராஜ் அதிமுகவிற்கு சாதகமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
திருவாரூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், அதிமுக வேட்பாளர் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வத்தை ஆதரித்து பேசிய அவர் “ஒருவேளை இந்த முறையும் நீங்கள் கருணாநிதியை தேர்ந்தெடுத்துவிட்டால், சந்தோஷத்தில் அவர் இறந்து விடக்கூடும். அப்படி அவர் மரணமடைந்து விட்டால் மீண்டும் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் வரும்.
எனவே அதிமுகவிற்கு ஒட்டுப்போடுங்கள். உலகத்திலேயே யாரும் செய்யாத சாதனையை கருணாநிதி செய்திருக்கிறார். 92 வயதில் தேர்தலில் போட்டியிடும் நபர் இவர் ஒருவர் மட்டும்தான்.
இளங்கோவன் ஜெயலலிதாவை மோசமாக விமர்சித்த போது, கருணாநிதி அங்குதான் இருந்தார். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் என்கிற முறையில் கருணாநிதி அவரை கண்டித்திருக்க வேண்டும். ஆனால் அவர் செய்யவில்லை. காரணம், அப்படி பேசுவதற்காகத்தான் அவர் இளங்கோவனை தன்னுடன் வைத்துள்ளார்.
நாங்கள் அரசியலுக்கு வந்தால் எங்களை புளிய மரத்தில் கட்டி வைத்து தோலை உரியுங்கள் என்று ராமதாஸ் கூறினார். அப்படி செய்தால் அவர் வருடக்கணக்கில் இங்கேயே இருக்க வேண்டும். அடிப்பதில் நாங்கள்தான் கில்லாடி.
பாட்ஷா படத்தில் ரஜினியையே கட்டி வைத்து தோலை உரித்தவர்கள் நாங்கள்.ராமதாஸ் எங்களுக்கு சர்வ சாதரணம்” என்று பேசினார்.