தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று திமுக, காங்கிரஸ் கட்சிகள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் கூறியுள்ளன.
திமுக சார்பில் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் சார்பில் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை இன்று சந்தித்து ஒரு புகார் மனுவை கொடுத்தனர்.
அந்த மனுவில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பாரபட் சமாக நடந்து கொள்கிறார் என்றும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர்கைள் கூறியதாவது:-
தமிழக சட்டசபை தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதற்காக மாவட்ட தலைநகரங்களில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் கரூர், சென்னை, ஊத்தங்கரையில் ஏராளமான பணம் பிடிபட்டது. வெள்ளி கொலுசுகளும் தங்க நகைகளும் ஏராளமான அளவில் பிடிபட்டுள்ளன.
இது தேர்தலுக்காக பட்டுவாடா செய்தவற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆந்திரா, கேரளா முதலிய வெளிமாநில டிஜிபி, ஐஜி, டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகளை வரவழைத்து பணப்பட்டுவாடாவைத் தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.