சமூக வலைதளங்களில் திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்கள் கேலியும், கிண்டலுமாக விமர்சிப்பதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
திரைப்படம் வெளியாகும் அன்றே அரை மணி நேரம் படம் ஓடுவதற்குள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் “தேறும்”, “தேறாது”, “செம”, “மொக்க” என்று விமர்சிக்கப்படுவது வழக்கமாகி விட்டது. இப்படி தொடங்கும் விமர்சனம் பின்னர் நடிகர், நடிகைகளை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதாக உள்ளது.
இந்நிலையில் இதனை சட்டரீதியாக இதனை கட்டுப்பாட்டில் கொண்டுவர ஜே.எஸ்.கே.கோபி என்பவர் தொடர்ந்து முயற்சி செய்துவருகிறார். இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சினிமா விமர்சனத்திற்கு உட்பட்டது என்றாலும் தற்போது ஆழமில்லாத மேம்போக்கான விமர்சனங்களே சமூக வலைதளங்களில் எழுதப்படுகின்றன. இதனால் பணம் போட்ட முதலீட்டாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
விமர்சனங்கள் மக்களின் ரசனையை தூண்டும் படியாகவும் இருக்க வேண்டும். பொழுது போக்காக இருக்கக்கூடாது. அது போல நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களை விமர்சனம் என்ற பெயரில் கேலி வார்த்தைகளால் எழுதுவது கண்டிக்கத்தக்கது என்றும் நாசர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.