‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கியுள்ள மிஷ்கின், அடுத்து பீரியட் ஃபிலிம் எடுக்கப் போகிறாராம்.
‘பாகுபலி’ என்ற ஒற்றைப் படத்தின் மெகா வெற்றி, பெரும்பாலான இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் சரித்திரக் கதையின் மீதான ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது. ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் ‘சங்கமித்ரா’ படத்தை இயக்கப் போகிறார் சுந்தர்.சி. இன்னொரு பக்கம், மோகன்லால் நடிப்பில் ‘மஹாபாரதம்’ படத்தை, ஆயிரம் கோடி செலவில் எடுக்கப் போகிறார்கள்.
அல்லு அரவிந்த் தயாரிப்பில், 500 கோடி பட்ஜெட்டில் படமாகப் போகிறது ‘ராமாயணம்’. எஸ்.எஸ்.ராஜமெளலியின் அசோஸியேட்டான மஹாதேவ் இயக்கத்தில் சரித்திரக் கதையில் நடிக்கப் போகிறார் ராகவா லாரன்ஸ். ‘பாகுபலி’ படத்துக்கு திரைக்கதை எழுதிய விஜயேந்திர பிரசாத், இந்தப் படத்துக்கு கதை எழுதுகிறார். இப்படி, இந்திய சினிமா உலகையே சரித்திரக் கதைகளின் பக்கம் திருப்பியிருக்கிறது ‘பாகுபலி’.
இந்நிலையில், இயக்குநர் மிஷ்கினுக்கும் சரித்திரப் படமொன்றை இயக்கும் ஆசை இருக்கிறதாம். தற்போது விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கியிருக்கிறார் மிஷ்கின். இந்தப் படத்தைத் தொடர்ந்து தொடர் கொலைகளைப் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்து வைத்திருக்கிறாராம். அத்துடன், சயிண்டிஃபிக் மற்றும் சரித்திரப் படங்களையும் இயக்கப் போவதாக லிஸ்ட் போட்டுள்ளார் மிஷ்கின்.