மலையாள நடிகையான மஞ்சுவாரியார் அரசியல் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலம் கோழிக் கோட்டில் வருகிற 25, 26, 27-ஆம் தேதிகளில் பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள், கட்சியின் அகில இந்திய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
இதையொட்டி கேரள மாநில பா.ஜனதா கட்சி சார்பில் கேரள பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய செயற்குழு தொடங்கும் 25-ந்தேதி கோழிக்கோட்டில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு ஓண விருந்து அளிக்கப்படுகிறது.
அதற்கு முந்தின நாள் நடிகை மஞ்சுவாரியாரின் நாட்டிய நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் பிரதமர் முன்னிலையில் நடிகை மஞ்சுவாரியார் ராமாயண கதை என்ற நாட்டிய நாடகத்தை நடத்துகிறார்.
பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளை மஞ்சுவாரியார் தலைமையிலான குழுவினர் நடத்துகிறார்கள். இதற்காக மஞ்சுவாரியார் அடிக்கடி கட்சியின் மேலிட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
இதனால் அவருக்கு பா.ஜனதா கட்சியின் மீது மிகுந்த அபிமானம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே அவர், பா.ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றுவார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.