300 திரையரங்குகளில் பரதேசி
, செவ்வாய், 12 மார்ச் 2013 (14:02 IST)
பாலாவின் பரதேசி மார்ச் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 300 திரையரங்குகளில் படத்தை திரையிடுகின்றனர்.
அதர்வா, வேதிகா, தன்ஷிகா என்று அதிக பிரபலமில்லாத நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் என்றாலும் பாலா என்ற பெயர் பரதேசியை இந்த வருடத்தின் மிக முக்கியமான படமாக மாற்றியிருக்கிறது. படத்தைப் பார்க்க ஒவ்வொரு ரசிகனும் ஆர்வம் கொண்டிருக்கிறான். தமிழகத்தில் ஜேஎஸ்கே ஃபிலிம் 300 திரையரங்குகளில் படத்தை வெளியிடுகிறது. வெளிநாட்டு உரிமையை ஐங்கரன் வாங்கியுள்ளது. பாலா படம் என்பதால் வெளிநாடுகளிலும் ரசிகர்கள் படத்தைப் பார்க்கும் ஆவலுடன் உள்ளனர்.முதல்முறையாக வடஇந்தியாவிலும் பாலா படம் வெளியாகிறது. பரதேசியைப் பார்த்து வியந்த அனுராக் காஷ்யப் தனது பாண்டம் மூவிஸ் சார்பில் பரதேசியை வடஇந்தியாவில் இந்தி சப் டைட்டிலுடன் வெளியிடுகிறார். குறிப்பாக மும்பை மல்டிபிளக்ஸ்களில் பரதேசியை மும்பை தமிழர்கள் கண்டு ரசிக்கலாம்.கேன்ஸில் போட்டிப் பிரிவில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பரதேசி தவறவிட்டாலும் மாநில மற்றும் தேசிய அளவில் இப்படம் பல விருதுகளை கைப்பற்றும் என்பது நிச்சயம்.