‘சிட்டி ஆஃப் கோல்ட்’ என்ற படத்தைத் தயாரித்துவரும் இந்திப் படத் தயாரிப்பாளர் - இயக்குனர் மகேஷ் மன்ஞ்ரேகர், நமது சமூகத்தின் பிரச்சனைகள் குறித்து சற்றும் கவனம் செலுத்தாத உணர்வற்ற சமூகம் நாம் என்று கூறியுள்ளார்.
1980களில் மும்பையிலுள்ள ஜவுளி ஆலைகளில் பணியாற்றியத் தொழிலாளர்களின் பிரச்சனைகளையும், அவர்களின் வாழ்க்கை அவலங்களையும் அடிப்படையாகக் கொண்டது இவர் இயக்கித் தயாரித்து வரும் ‘சிட்டி ஆஃப் கோல்ட்’ திரைப்படம்.
இத்திரைப்படம் குறித்து பிடிஐ செய்தியாளர் அஜித் அந்தாரேயிடம் பேசிய மகேஷ் மன்ஞ்ரேகர், “நமது சமூகத்தின் அங்கமாகத் திகழும் நமது சகோதரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி நாம் சற்றும் கவலைப்படுவதில்லை. ஜெயந்த் பவார் இப்படத்திற்காக எழுதிய கதையைப் பார்த்த பிறகுதான் எனக்கே ஜவுளி ஆலைத் தொழிலாளர்களின் பிரச்சனை முழுமையாகத் தெரிந்தது” என்று கூறியுள்ளார்.
சமூகப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு படம் எடுப்பது இந்த இயக்குனர் - தயாரிப்பாளருக்கு புதிய அனுபவம் இல்லை. இவர் இயக்கித் தயாரித்த ‘வாஸ்தவ்’ (1999), அஸ்திவா’ (2000), அமிதாப் பச்சன் நடித்த ‘விருத்’ (2005) ஆகிய படங்கள் அப்படிப்பட்டவையே.