கடனை திருப்பி செலுத்தாததால் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்த கோவா படத்துக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது நீதிமன்றம்.
தனது ஆக்கர் ஸ்டுடியோ சார்பில் கோவா படத்தை தயாரித்திருக்கிறார் சௌந்தர்யா. இந்தப் படம் மட்டுமின்றி தனது அனைத்துப் பட வேலைகளுக்கும் அப்பா ரஜினிகாந்தின் உதவியை எதிர்பார்க்காமல் வெளியிலிருந்து கடன் வாங்கி ரிஸ்க் எடுத்திருப்பதாக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றிலும் குறிப்பிட்டிருந்தார் சௌந்தர்யா. இந்த சொந்த முயற்சிதான் இப்போது வில்லங்கமாகியிருக்கிறது.
கோவா படத்துக்காக வருண் மணியன் என்பவரிடம் 2007ல் ஒரு கோடியே அறுபது லட்சங்கள் கடனாக வாங்கியிருக்கிறார் சௌந்தர்யா. வருட வட்டி 24 சதவீதம். இந்தப் பணத்தை செட்டில் செய்யும்படி வருண் தரப்பினர் கடிதம் எழுதியதற்கு ஆக்கர் ஸ்டுடியோவின் இயக்குனர் லதா ரஜினிகாந்த், நவம்பர் 30 ஆம் தேதிக்குள் பணத்தை தந்துவிடுவதாக பதிலளித்திருக்கிறார். ஆனால் பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் நீதிமன்றத்தை அணுகிய வருண், தனது பணத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் வரை கோவா படத்துக்கு தடை விதிக்கும்படி கேட்டுக் கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதி டிசம்பர் 11 ஆம் தேதிக்கு முன் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சௌந்தர்யாவுக்கு உத்தரவிட்டார். அதுவரை கோவா படத்துக்கு இடைக்கால தடை உத்தரவையும் அவர் பிறப்பித்தார்.