தமிழில் வெளியாகும் 90 சதவீதப் படங்கள் காதலை மையமாகக் கொண்டவை. புதுமுகங்கள் இயக்கும், நடிக்கும் படங்கள் என்றால் அவை நிச்சயமாக காதல் கதையாகவே இருக்கும்.
காதலாகி படத்தை இயக்கும் கே.ஆர்.விஷ்வா சினிமாவுக்கு புதியவர். இவர் படத்தில் நடிக்கும் மூன்று ஜோடிகளும் புதியவர்கள். படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பது ரசிகர்களுக்கு யூகிக்காமலே தெரிந்திருக்கும்.
மனிதகுலம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை மாறாதது காதலும், நட்பும்தான். காதலுக்காக நண்பர்களும், நண்பர்களுக்காக காதலர்களும் கண்ணியமாக போராடும் கதைதான் காதலாகி என்கிறார் விஷ்வா.
படத்தின் ஸ்டில்களில் நாயகி கடலில் கண்ணாடி உடையில் புரண்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விஷ்வா சொல்லும் அளவுக்கு இந்த காதலில் கண்ணியம் இருக்குமா என்பது சந்தேகமே.
படத்தில் மூன்று ஜோடிகள் இருக்கிறார்கள். இந்த ஆறு பேருமே புதுமுகங்கள். ஏ.ஆர்.ரஹனா இசையமைக்க வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.