பாராளுமன்ற தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் மா.சந்திரகாசி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று சிதம்பரம் சென்றார்.
அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து
முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:- மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால், அதில் அங்கம் வகித்த திமுகவால் தமிழக மக்களுக்கு, தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பாதுகாப்புத் துறையையே பாதுகாப்பற்றது ஆக்கிவிட்ட அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. கடந்த 10 ஆண்டுகளாக முப்படைகளை நவீனமயம் ஆக்கும் நடவடிக்கைகள் எதையும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எடுக்கவில்லை.
கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களில் தீ விபத்து ஏற்படாமல் தடுக்கக்கூடிய மின்கல அமைப்புகளை வாங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்து இதன் காரணமாக இந்திய கடற்படையின் வன்பொருள்கள் பாதிக்கப்படும் என்று 2009 ஆம் ஆண்டே மத்திய தணிக்கைத்துறை கோடிட்டு காட்டியுள்ளது.
ஆனால், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதன் விளைவு சென்ற ஆண்டு கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் மும்பை அருகே தீக்குள்ளாகியது. இதில் 18 கடற்படை வீரர்கள் மரணம் அடைந்தனர்.
இதே போன்று, 15 நாட்களுக்கு முன்பு இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பல் தீ விபத்துக்குள்ளாகி 2 கப்பற்படை வீரர்கள் மரணமுற்றனர்; 7 பேர் காயமுற்றனர். இந்த விபத்தில் உயிரிழந்த ஓர் அதிகாரி, சிந்து ரத்னா மற்றும் இதர துணை நீர்மூழ்கி கப்பல்களை இயக்குவது என்பது வெடிகுண்டுடன் பயணம் செய்வதற்கு சமம் என்று தனது மூத்த அதிகாரிகளிடம் மரணம் அடைவதற்கு முன்பு கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.