இரண்டு வருட வனவாசத்துக்குப் பின் இனிப்பு பாயாசம் குடித்த மனநிலைக்கு திரும்பியுள்ளார் வடிவேலு. ஜெயா தொலைக்காட்சியில் தமிழ்ப் புத்தாண்டுக்கு அவரது பேட்டி வரவிருக்கிறது.
கடந்த இரண்டு வருடங்களாக அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்குமா என்று அல்லாடிக் கொண்டிருந்தார் வடிவேலு. அவர் முயன்ற அனைத்து வழிகளும் ஆரம்பத்திலேயே அடைக்கப்பட்டன. வரவிருக்கிற தெனாலிராமனுக்கு கிளம்பியிருக்கும் எதிர்ப்புக்கு அதிகார மையத்தின் அனுமதி உண்டு என்ற கிசுகிசுக்கள் வேறு அவரது வயிற்றில் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டது.
இந்நிலையில் ஜெயா தொலைக்காட்சியிலிருந்து அவர்களாகவே அழைத்து தமிழ்ப் புத்தாண்டுக்கு பேட்டி கேட்டனர். வரம் வேண்டி தவம் இருந்தவருக்கு தொலைபேசி அழைப்பு அசரீரியாகவே கேட்டது. அதுக்கென்னங்க என்று உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
எலெக்ஷன் என்று எழுதிக்காட்டினாலே பதறிப் போகிறவர் இப்போதுதான் சகஜநிலைக்கு திரும்பியிருக்கிறார்.