நீர்ப்பறவை - கன்னி தாய் காதல் தாயாக மாறியது
, சனி, 1 டிசம்பர் 2012 (16:20 IST)
துப்பாக்கி படத்தில் முஸ்லீம்களை புண்படுத்தும் காட்சிகள் நீக்கப்படும் என்று உறுதி அளித்தவர்கள் காட்சிகளை நீக்காமல் மியூட் செய்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாற்று எழுந்தது நினைவிருக்கலாம். நீர்ப்பறவையில் வைரமுத்து எழுதிய பாடல் வரிகள் சர்ச்சையை கிளப்பின. துப்பாக்கி போல் மியூட் செய்தார்களா இல்லை வரிகளையே மாற்றினார்களா என்ற ஆவல் அனைவருக்கும். இதோ வைரமுத்தே அதுபற்றி கூறுகிறார்.என் மதிப்புக்குரிய கிறிஸ்தவ அன்பர்கள் சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க நீர்ப்பறவை பாடல்களில் அவர்கள் குறிப்பிட்ட சில வரிகளை மாற்றி அமைத்திருக்கிறேன். படத்தின் பாடல் காட்சிகளில் மாற்றப்பட்ட வரிகள்தான் இடம்பெறுகின்றன. கலை என்பது சமூகத்தை மேம்படுத்துவதாகவும் பண்பாட்டை செழுமை செய்வதாகவும் இருக்க வேண்டுமென்பது எனது கவிதைக்கொள்கை. எனவே எவர் மனதையும் புண்படுத்துவது எனது நோக்கமாக இருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.என் உயிரை அர்ப்பணம் செய்தேன், உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன், சத்தியமும் ஜீவனுமாய் நிலைக்கிறாய் என்ற வரிகளுக்கு மாற்றாக என்னுலகம் கைவசம் இல்லை, என் பெயரும் ஞாபகம் இல்லை, சத்தியமாய் என்னருகே நீ இருக்கிறாய் என்று எழுதப்பட்டுள்ளது.கிச்சுகிச்சு பண்ணும் கிறிஸ்தவ பெண்ணே பச்சை முத்தம் தர மனமில்லையா, ஒரு கன்னம் தர மறுகன்னம் காட்டு திருமறை வரி நினைவில்லையா என்ற வரிகளுக்குப் பதில் கிச்சு கிச்சு பண்ணும் கிளிவண்ணப் பெண்ணே பச்சை முத்தம் தர மனமில்லையா இரு இதயம் நெருங்கிய பின்னே இதழுக்கு என்ன இடைவெளியா என்றும்,கண்ணீராடும் பிள்ளைக்கு நீயே கன்னித்தாயடி என்ற வரிக்கு பதில் காதல் தாயே நீயடி எனவும் மாற்றி எழுதியிருக்கிறார் வைரமுத்து. படத்தில் இந்த மாற்றி எழுதப்பட்ட வரிகள்தான் இடம்பெறுகின்றன என கவிப்பேரரசு தெரிவித்துள்ளார்.