சென்னையில் பிளஸ் 1 மாணவர் ஒருவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சார்ஜாவில் இருந்து சென்னை வந்த 2 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை சேலையூர் காமராஜபுரம் மசூதி காலனி உஸ்மான் தெருவைச் சேர்ந்த முகமது பிலால் (16) என்ற மாணவன் கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
இவருக்கு கடந்த 3 நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்தது. இதனால் அவருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான சளி பரிசோதனை கிண்டியில் உள்ள கிங் பரிசோதனை மையத்தில் நடைபெற்றது.
சோதனையில் முகமது பிலாலுக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே சார்ஜாவில் இருந்து இன்று சென்னை வந்த இரண்டு பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இரண்டு பேரும் தஞ்சாவூர், ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.