Publish Date: Mon, 27 Apr 2015 (10:08 IST)
Updated Date: Mon, 27 Apr 2015 (10:10 IST)
பிரபல பாடகராக பல பாடல்கள் பாடியுள்ள ஸ்ரீநிவாஸ் முதலில் இசையமைத்துள்ள படம் கங்காரு. அந்தப்பட வாய்ப்பு எப்படி கிடைத்தது? அது தந்த அனுபவங்கள் என்னென்ன? ஸ்ரீநிவாஸே கூறுகிறார்.
பாடகராக இருந்த நீங்கள் எப்படி இசையமைப்பாளராக மாறினீர்கள்?
நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று 2000 பாடல்கள் பாடியிருக்கிறேன். எனக்கு இசைமீது தனியாத தாகம் உண்டு. ஆர்வமுண்டு. நம்பிக்கை உண்டு. ஆனால் இசையமைப்பதைத் தேடிப் பயணப்படவில்லை. காரணம் பாடகராகவே நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. அப்படியும் வஸந்த் சார் இயக்கத்தில், ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்தேன்.
இசையமைப்பாளராக அதுதான் உங்களுக்கு முதல் பாடல் இல்லையா?
ஆம். 'இனி நானும் நானில்லை' என்கிற அந்தப் பாடலும் ஹிட்தான். மீண்டும் இசையமைக்க நேரமில்லை. இந்நிலையில் நண்பர் மூலம் சாமி வந்தார். கதை கேட்டேன். ரொம்பவும் நேர்மையாக இருந்தது. பாடல் உருவானது. பாடல் பிடித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சம்மதித்தது அவரது ரசனையின் மதிப்பைக் காட்டியது.
கங்காருக்கு வைரமுத்து பாடல்கள் எழுதியிருப்பது பற்றி...?
வைரமுத்து சாரின் வரிகளைப் பாடியிருக்கிறேன். அவர் வரிகளுக்கு இசையமைப்பேனா என்று கனவு கூட கண்டதில்லை. அப்படி நடந்தது என் பாக்கியம் .அவர் பாடல்கள் படத்துக்குப் பெரிய பலம். படத்தில் 5 பாடல்கள். அவர் எழுதிய வரிகளுக்கு இசையமைத்து 2 பாடல்களும், மெட்டுக்கு எழுதி 3 பாடல்களும் என்று இசையமைப்பில் இருவேறு அனுபவங்களும் கிடைத்தன. பாடல்கள் பெரிய வெற்றி. ஐ டியூன்களில் நம்பர் ஒன் ஆனது.
படம் வெளியான நிலையில் எப்படி உணர்கிறீர்கள்?
கங்காருவில் காதல், பாசம், தத்துவம் என எல்லாவகை பாடல்களும் உள்ளன. பாடல்களின் வெற்றியைத் தொடர்ந்து படமும் வெற்றி பெற்றிருப்பதால் மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.
Mahalakshmi
Publish Date: Mon, 27 Apr 2015 (10:08 IST)
Updated Date: Mon, 27 Apr 2015 (10:10 IST)