ரசிகர்களுக்கு நடிகைகளின் சொகுசு வாழ்க்கையும், வெளிப்புற ஆடம்பரங்களும் மட்டுமே தெரியும். தங்களை சினிமாவில் நிலைநிறுத்த பிடித்த உணவுகளைக்கூட சாப்பிட முடியாத அவலநிலை தெரிவதில்லை.
பாகுபலிக்குப் பிறகு சிறந்த நடிகை என்று பெயர் எடுத்த தமன்னா, தனது விஷயம் நிரம்பிய பேச்சுகளால் சீரிய நடிகை என்ற பாராட்டையும் பெறுகிறார். அவருடனான உரையடலில் இருந்து...
இன்றைய தேதியில் யாரை சிறந்த நடிகையாக யாரை சொல்வீர்கள்?
சினிமா துறையில் கடும் போட்டி இருக்கிறது. கதாநாயகிகள் ஒருவரை மிஞ்சி ஒருவர் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். நான் ஒரு படத்தில் சிறப்பாக நடித்து இருந்தால் இன்னொரு படத்தில் வேறொரு நடிகை சிறப்பாக நடிக்கிறார். எனவே இவர்தான் சிறந்த நடிகை என்று யாரையும் சொல்ல முடியாது.
நீங்கள் 100 சதவீத நடிப்பை கொடுத்த படம் எது?
நான் மட்டுமில்லை, சினிமாவில் எந்த நடிகையும் 100 சதவீதம் சிறப்பான நடிப்பை கொடுத்தேன் என்று திருப்திபட்டுக்கொள்ள முடியாது.
எனில், அவர்களுக்கு திருப்தியை தருவது எது?
ரசிகர்களின் பாராட்டுகளே அவர்களுக்கு திருப்தியையும், சந்தோஷத்தை கொடுக்கிறது.
அப்படி சமீபத்தில் கிடைத்த சந்தோஷம்?
நான் தமிழ், இந்தியில் தயாராகும் தேவி படத்தில் கஷ்டப்பட்டு நடனம் ஆடி இருந்தேன். அந்த நடனம் சிறப்பாக இருந்ததாக பாராட்டுகள் குவிகிறது. இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்தது. நான்பட்ட கஷ்டங்களை இதில் மறந்து போனேன்.
இது உங்கள் திறமைக்கு கிடைத்த பாராட்டுதானே?
இது எனது திறமைக்கு கிடைத்த பாராட்டு என்று தம்பட்டம் அடித்துக்கொள்ள மாட்டேன். என்னை மிஞ்சி இன்னொரு நடிகையாலும் ஆட முடியும்.
உடலை எப்படி ஸ்லிம்மாக மெயின்டெய்ன் செய்கிறீர்கள்?
எனது உடல் எடை 50-ல் இருந்து 55 கிலோவுக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன். இதற்காக உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறேன். எடையை கூட்டும் உணவுகளை சாப்பிடுவது இல்லை.
ஓட்டலில் ஒரு நாள் வெஜிடபிள் சாலட் சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன். எதிரில் ஒரு பெண் எனக்குப் பிடித்த இனிப்பு வகைகளை சாப்பிட்டார். அதைப் பார்த்ததும் நாக்கில் நீர் ஊறியது. அந்த சாக்லெட் எனது பிளேட்டில் இருக்க கூடாதா என்று ஆசைப்பட்டேன். ஓட்ஸ், முளை கட்டிய தானியங்களை சாப்பிடும்போது பூரி மற்றும் எண்ணெயில் செய்த உணவு வகைகளை சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று ஏங்குவேன்.
அதுபோன்ற சந்தர்ப்பங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்?
அந்த நேரத்தில் ரசிகர்கள் எனது மனக்கண்ணில் வருவார்கள். அவர்கள் என்னை பார்த்து எப்படி சந்தோஷப்படுகிறார்கள் என்று நினைத்து பார்ப்பேன். அவர்களுக்காக ருசியான உணவுகளை தியாகம் செய்யலாம் என்று மனதை தேற்றிக்கொள்வேன்.