முண்டாசுப்பட்டிக்குப் பிறகு விஷ்ணு நடித்திருக்கும் சயின்ஸ்ஃபிக்ஷன் படம், இன்று நேற்று நாளை. சி.வி.குமார் தயாரிப்பு. தமிழில் இதுவரை இடம்பெறாத டைம் மிஷின்தான் கதைக்களம். பத்திரிகையாளர் சந்திப்பில் விஷ்ணுவின் பேச்சு இங்கே உங்களுக்காக.
இன்று நேற்று நாளை ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் படம். கதையை கேட்டதும் என்ன தோன்றியது?
இந்தப் படத்தில் நடிக்க அழைத்த போது, சி.வி.குமாரின் நிறுவனம் என்பதால் சந்தோஷமாக சென்றேன். கதையைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். அதேசமயம் பயமாகவும் இருந்தது.
என்ன பயம்?
டைம் மெஷின் கான்செப்டை கொண்ட முதல் தமிழ்ப் படம். புதுமையாக இருந்தாலும் முண்டாசுப்பட்டிக்குப் பிறகுதான் கேரியர் நல்லா போய்கிட்டிருக்கு. இந்த நேரத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்றும் தோன்றியது.
பிறகு எப்படி ஒப்புக் கொண்டீர்கள்?
டைரக்டர் ரவிக்குமார்தான், மத்தவங்க பண்றதுக்கு முன்னாடி நாம இந்த வித்தியாசமான முயற்சியை பண்ணலாம் என்றார். எனக்கு அது பாஸிடிவான விஷயமாக தெரிந்தது.
படம் முடிந்து பார்த்த போது எப்படி இருந்தது?
படத்தின் ரிசல்டைப் பார்த்த போது சந்தோஷமாக இருந்தது. முதல் தடவை இப்படியொரு கதையில் நடித்தது பெருமையாகவும் இருக்கிறது.
தயாரிப்பாளர்கள் பற்றி...?
இந்த மாதிரி கதைகளை படமாக்க தயாரிப்பாளர்கள் கிடைப்பது கஷ்டம். ஆனால், சி.வி.குமார், ஞானவேல்ராஜா இரண்டு பேரும் எதையும் வித்தியாசமாக செய்ய நினைப்பவர்கள் என்பதால் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
படத்தில் ஆர்யா நடித்திருக்கிறாரே?
ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வேண்டும் என்று ஆர்யாவிடம் கேட்டதும் கதையைக்கூட கேட்காமல் வந்து நடித்துக் கொடுத்தார். படத்தின் ட்ரெய்லர் அவரையும் இம்ப்ரஸ் செய்திருக்கிறது.
இந்தப் படத்தின் சிறப்பு என்ன?
நமக்கு அடுத்த பிறவி இருக்குமா, தெரியாது. ஆனா, இந்தப் பிறவியிலேயே எந்தவொரு பிறவியையும் நாம் பார்க்க முடியும், சந்திக்க முடியும் என்றாலே நாம் அதிசய பிறவிகள்தான். அப்படிப்பட்ட அதிசயமான விஷயங்களைதான் இந்தப் படம் உங்கள் கண்முன் நிறுத்தப் போகிறது.