தூம் 3 பற்றி சொல்லுங்கள்? தூம் 3 படத்தில் சர்க்கஸ் கலைஞனாக நடித்திருக்கிறேன். வில்லன் வேடம். நான் நடித்த ஹிந்திப் படங்களைதான் தமிழ்நாட்டில் பார்த்திருக்கிறார்கள்.
ஆனால் தூம் 3 தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் என்னை ரசிப்பார்கள் என்பது மகிழ்ச்சியை தருகிறது. அந்தவகையில் எனக்கு இது தமிழில் முதல் படம். என்னை ஒரு புதுமுக நடிகரைப் போல உணர்கிறேன்.
தமிழில் நடிப்பீர்களா? தமிழ் மொழி தெரியாது என்பதால் இதுவரை தமிழில் நடிக்கவில்லை.
தமிழ் பேசத் தெரியாத கதாபாத்திரமாக இருந்தால் தமிழ்ப் படத்தில் நடிக்க தயார்.
ரஜினி பற்றி...? நான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன். ஹிந்தியில் அவர் நடித்த உத்தர் தஷின், கிரப்தார் படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அவரது ஸ்டைல் என்னை மிகவும் கவர்ந்தது.
அவரது ரசிகனாக இருக்கும் போதுதான் நான் நடிக்க வந்தேன். ஆதங்க் கி ஆத்ங்க் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிற வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரின் மனிதநேயம், நேரம் தவறாமை போன்ற குணங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் மீதான மரியாதை மேலும் கூடியது.
கஜினியில் நடித்த போது எப்படி உணர்ந்தீர்கள்? கஜினி ரீமேக் குறித்து ஏ.ஆர்முருகதாஸுடன் பேசிய போது அந்த வேடத்தை என்னால் செய்ய முடியுமா என்று பயந்தேன்.
அதுவரை பழிவாங்கும் வேடத்தில் நான் நடித்ததில்லை என்பதால் என்னுடைய தயக்கத்தை சூர்யாவிடம் சொன்னேன். அவர்தான் என் தயக்கத்தைப் போக்கி நடிக்கச் சொன்னார். அவருக்கு என் நன்றி. அவர் தந்த தைரியத்தில்தான் கஜினி ஹிந்தி ரீமேக்கில் நடித்தேன்.
பாலசந்தருடனான சந்திப்பு பற்றி...? ஹிந்தியில் நான் இயக்கி நடித்த தாரே ஜமீன் பர் படத்துக்ககு தனியார் அமைப்பு விருது வழங்கியது. அந்த விழாவில் பேசிய பாலசந்தர் என்னை பற்றி உயர்வாகப் பேசினார்.
அதைக் கேட்டு நெகிழ்ந்து போனேன். என் கண்கள் கலங்கிவிட்டன. அதனால்தான் சென்னை வந்த போது அவரை சந்தித்துப் பேசினேன். அவர் தூம் 3 வெற்றி பெற வாழ்த்தினார்.
அவரின் உன்னால் முடியும் தம்பியை நீங்கள் ரீமேக் செய்வதாக பேச்சு உள்ளதே...? அப்படியொரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால் அது வதந்தி.
கடைசியாக...? நான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் நேசிக்கிறேன். ஒவ்வொரு படமும் எனக்கு முக்கியமானது. பாலிவுட்டை பொறுத்தவரை தென்னிந்திய கலைஞர்களை மிக அதிகமாக நேசிக்கிறோம். ஏ.ஆர்.ரஹ்மான், ஏ.ஆர்.முருகதாஸ், ரவி.கே.சந்திரன் போன்றவர்கள் அங்கு வந்து சாதனை புரிந்திருக்கிறார்கள்.