Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முக்கியமான பலப்பரிட்சையில் தேறிய இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் ஒரு பார்வை

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2011 (17:58 IST)
அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 1-1 என்று சமன் ஆனது. முதன் முதலாக தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்காமல் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தகுந்த சாதனை என்பதை மறுப்பதற்கில்லை.

தொடருக்கு முன்பு தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் வான் சில் இந்தியாவின் தென் ஆப்பிரிக்க பயண வரலாறை வைத்துக் கொண்டு இந்திய அணியை மட்டம் தட்டினார். ஆனால் அதெல்லாம் இப்போது தொடரை விளம்பரப்படுத்தப் பேசும் நிர்பந்தமாக மாறிவிட்டது. எனவே அதனை வான் சில்லின் உண்மையான கருத்து என்று நாம் வாதிட வேண்டியதில்லை.

FILE
பொதுவாக இந்திய அணி ஒரு வளர்ச்சிப ் பாதையில் சென்று கொண்டிருக்கும ் போதும் பழைய விஷயங்களைப் பேசி இந்திய அணியை மட்டம் தட்டுவது அந்தந்த நாட்டு முன்னாள் வீரர்களுக்கும் ஊடகங்களுக்கும் வழக்கமாகி வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த இந்திய அணி அதனை திறம்பட முறியடித்து வருகிறது.

செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் டாஸ் ஒரு முக்கியத் திருப்பமாக அமைந்தது. தென் ஆப்பிரிக்காவுக்குப் பதில் இந்தியா டாஸ் வென்றிருந்தால் இந்தத் தொடரின் போக்கே கூட மாறியிருக்கும். இந்தியா தொடரை வென்றிருக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கும்.

ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில் 136 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியைத் தவிர்க்க முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்ட இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் சேவாக், கம்பீர், சச்சின், தோனி ஆகியோரது ஆட்டங்கள் மூலம் பேட்டிங் திறமையை காண்பித்தது. தோற்றாலும் அடுத்த போட்டியில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்புவது இப்போது இந்திய அணியின் தாரக மந்திரமாகும்.

அதனை வளர்த்து விட்டது ஜான் ரைட், சௌரவ் கங்கூலி, கும்ளே, கேரி கர்ஸ்டன், இப்போது தோனி என்பதில் ஐயமில்லை.

முதல் டெஸ்ட் போட்டியில் ஜாகீர் கான் இல்லாததால் பின்னடைவு ஏற்பட்டது என்பது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் வருகைக்கு பின்பு பெற்ற வெற்றி உறுதி செய்தது.

குறிப்பாக கிரேம் ஸ்மித்தை அவர் ஆட விடாமல் தொடர்ந்து வீழ்த்திவருவது மிக முக்கியமான நிகழ்வாகும். 22 சந்திப்புகளில் 11 முறை ஸ்மித்தை வீழ்த்தியுள்ளார் ஜாகீர் கான்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜாக் காலிஸின் ரன் அவுட் திருப்பு முனை என்றாலும் அதன் பிறகு ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் வீசிய பந்து வீச்சு அபாரமானது. ஆக்ரோஷமானது. 205 ரன்களே இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அடித்திருந்த நிலையில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்களை 131 ரன்களுக்குச் சுருட்டியது இதுவரை இந்திய அணியிடம் இல்லாத ஆக்ரோஷத்தைக் காட்டியது.

FILE
இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் நாயகன் லஷ்மண் ஆடிய ஆட்டம் அபாரமானது. கும்ளே தலைமையில் பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்த லஷ்மண் ஆடிய ஆட்டத்தை நினைவூட்டக் கூடியதாய் அமைந்தது. ஆனால் டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் பந்து வீச்சு ஆஸ்ட்ரேலியப் பந்து வீச்சைக் காட்டிலும் பயங்கரமானது. அதுவும் அவர்களுக்கென்றே பிரத்யேகமாகத் உருவாக்கப்பட்ட ஆட்டக்களத்தில் லஷ்மண் இன்னிங்ஸ் உலகத் தரமானது என்பதில் மிகையில்லை.

டர்பன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்கா தோல்வியுற்று புது வருட பிறப்பை சோகமாக கொண்டாடவேண்டியதாயிற்று.

கேப்டவுன் டெஸ்ட் போட்டியிலும் பெரும்பாலும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் ஒரே ஒரு வீரர் - ஜாக் காலிஸ்- இந்திய வெற்றியை தன் உறுதியான பேட்டிங் மூலம் தடுத்தார்.

இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்களில் ஜாக் காலிஸ் மட்டுமே ஒருவராக எதிர்நின்று தோல்வியை தவிர்த்துள்ளார். வெற்றியில் பங்களித்துள்ளார்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்திய அணியின் பேட்டிங் சற்றே தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் ஒரு அணியாகச் சிறப்பாக இருந்தது என்பதில் ஐயமில்லை.

குறிப்பாக கேப்டவுனில் கம்பீர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தென்னை மர உயரப்பந்து வீச்சை எதிர்கொண்டு மொகிந்தர் அமர்நாத்திற்கு பிறகு தைரியம் காட்டியது இந்திய அணிக்கு ஒரு புதிய தெமபை அளித்துள்ளது.

சச்சின் டெண்டுல்கரின் முதல் இன்னிங்ஸ் சதம் அவரது டெஸ்ட் இன்னிங்ஸ்களில் முதல்தரமானது என்றால் அது மிகையாகாது. டேல் ஸ்டெய்னுக்கும் அவருக்கும் ஒரு போரே நடந்தது என்று கூறலாம். அதில் சச்சின் வெற்றி பெற்றார்.
FILE

டேல் ஸ்டெய்னும் "டெண்டுல்கர் விக்கெட்டை வீழ்த்துவதில் நேரத்தை வீணடிப்பதில் பயனில்லை" என்று கூறி தனது தோல்வியை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.

3 வது டெஸ்ட் போட்டியில் 130/6 என்ற நிலையில் தென் ஆப்பிரிக்காவை தோனி பிடியிலிருந்து நழுவவிட்டார் என்ற விமர்சனம் பலதரப்பிலிருந்தும் தொடுக்கப்படுகிறது. இது நியாயமற்ற ஒரு விமர்சனம்.

ஏனெனில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸும், டீவிலியர்ஸும் இரண்டரை மணிநேர ஆட்டத்தில் 225 ரன்களைக் குவிக்க முடிந்ததால்தான் 3ஆம் நாள் ஆட்டத்தின் பிற்பகுதியில் இந்திய அணி மீண்டும் களமிறங்க வேண்டியிருந்தது. அந்த வேகத்தில் ரன் எண்ணிக்கை உயர்வதை கட்டுப்படுத்தி 125 ரன்களை இந்தியா கட்டுப்படுத்தியிருந்தால் அன்றைய தினம் முழுதும் தென் ஆப்பிரிக்கா பேட் செய்திருக்கும். கடைசி 2 நாட்கள் என்பதில் டிரா செய்ய ஒரு வாய்ப்பு இருந்திருக்கும். ஏனெனில் செஞ்சூரியன் பிட்ச் பேட்டிங் பிட்சாக மாறியிருந்தது.

அதே போல் 3-வது டெஸ்ட் போட்டியில் ஜாக் காலிஸ் நிற்கிறார் பவுச்சர் களமிறங்கி ஓரளவுக்கு பாசிடிவாக விளையாடத் துவங்கினார். இந்த நேரத்தில் தோனி விடாப்பிடியாக ஆக்ரோஷமாக நெருக்கமான ஃபீல்ட் செட் செய்து அது தோல்வியில் போய் முடிந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அதனால்தான் தென் ஆப்பிரிக்க டிக்ளேரைத் தள்ளிப்போடும் பாதுகப்பு முறைக்கு வந்தார் தோனி. ஏனெனில் பிட்சில் ஸ்பின்னிற்கு ஒரு முனையில் மட்டும் லேசான ஆதரவு இருந்தது. அதுவும் பந்துகள் மெதுவாகவே திரும்பின. இதனால் தோனியைக் குற்றம் சொல்வதில் பயனில்லை.

தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித் 270 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தபோதே டிக்ளேர் செய்து இந்திய அணியை 4ஆம் நாளே களமிறக்கியிருந்தால் ஒரு வெற்றி வாய்ப்பை பார்த்திருக்கலாம்.

ஆனால் 270 ரன் இலக்கு என்றால் சேவாக் நேற்று ஆடியது போல் மெதுவாக ஆடியிருக்க வாய்ப்பேயில்லை. சேவாக், சச்சின், லஷ்மண், தோனி என்ற காரணிகள்தான் ஸ்மித்தையும் வெற்றிக்கான உந்துதலை தடுத்து நிறுத்தியது.

1-1 என்ற சமநிலை முடிவு இரு அணிகளுக்கு நியாயமான முடிவே.

ராகுல் திராவிட், இஷாந்த் ஷர்மாவிற்கு இது மறக்க வேண்டிய தொடராக அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ராகுல் திராவிட் ஒரு சதம் மட்டுமே எடுத்துள்ளார் சராசரியும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

பொதுவாகவே அவர் ஆட்டம் சொதப்பலாகிக் கொண்டிருக்கிறது. ரிக்கி பாண்டிங்கையே 3ஆம் நிலையில் களமிறங்காதே என்று ஆஸ்ட்ரேலியாவில் வலியுறுத்தி வருகின்றனர்.

ராகுல் திராவிட் 3ஆம் நிலையைக் கைவிட்டு 4 அல்லது 5ஆம் நிலையில் களமிறங்கினால் இன்னும் அதிகபட்சமாக ஒரு ஆண்டு அவரால் உருப்படியாக ஏதாவது பங்களிப்பு செய்யமுடியும். இல்லையெனில் இளைஞர்களுக்கு வழி விட்டு அவர் ஓய்வு பெறுவது நல்லது.

இந்தத் தொடரில் டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல் பல அரிய பந்துகளை வீசினாலும், ஸ்ரீஸாந்த், டர்பன் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜாக் காலிஸுக்கு வீசிய பவுன்சர் இந்தத் தொடரின் அதி அற்புதமான பந்து என்றால் அது மிகையாகாது.

2011 ஆம் ஆண்டை இந்தியா நல்ல முறையில் தொடங்கியுள்ளது. ஒரு நாள் போட்டிகளில் தொடரை வென்றால் இந்தத் தொடர் இந்தியாவுக்கு ஒரு அபாரமான தொடர் என்பதில் ஐயமில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற சிஎஸ்கே.. புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி முதலிடம்..!

டி 20 கிரிக்கெட்டில் அவர்களுக்காகதான் ஓய்வு பெற்றேன்.. மனம் திறந்த கோலி!

தோனி போன்றவர்கள் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறப்பார்கள்… ரெய்னா புகழாரம்!

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலினால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு

நடிகையின் புகைப்படங்களுக்கு விராட் கோலியின் லைக்... சர்ச்சைக்கு விளக்கம்!

Show comments