டர்பனில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இந்தப்போட்டி மாலை இந்திய நேரம் 6 மணியளவில் தொடங்குகிறது.
இது வரை தென் ஆப்பிரிக்க மண்ணில் 20 ஒருநாள் போட்டிகளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடியுள்ள இந்திய அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 16 போட்டிகளில் தோல்வி தழுவியுள்ளது.
இது இந்தியாவின் அயல்நாட்டு மண்ணின் ஒருநாள் சாதனைகளுக்கு இழுக்கு சேர்ப்பதாக உள்ளது.
சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்க மண்ணில் 1422 ரன்களை எடுத்துள்ளார். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இதில் 522 ரன்களை 26.10 என்ற குறைந்த சராசரியில் எடுத்துள்ளார்.
இந்த கடந்த கால புள்ளிவிவரங்களை வைத்துப் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒன்றும் செய்யவியலாது என்ற முடிவுக்கு நாம் வர முடியாது.
ஏனெனில் இந்த அணி வித்தியாசமான அணி. உலகக் கோப்பைக்கு முன் வெற்றியுடன் நாடு திரும்பவே அனைத்து வீரர்களும் போராட்ட குணம் கொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் சேவாக், கம்பீர், பிரவீண் குமார் ஆகியோரது காயங்கள் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும் ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா, முனாஃப் படேல், ஹர்பஜன் அல்லது அஷ்வின் கூட்டணி அந்த களத்தில் சிறப்பாக செயல் பட முடியும்.
பேட்டிங்கில் ஒரு நாள் போட்டிகளில் முரளி விஜய் சொதப்பி வருவது கவலைக்குரிய விஷயம்தான். இதனால் ரோஹித் ஷர்மாவையும், டெண்டுல்கரையும் களமிறக்க முடிவெடுத்தால் சிறப்பாக அமையும்.
விராட் கோலி அபாரமான ஃபார்மில் உள்ளார். ரெய்னா, யுவ்ராஜ ் சிங், தோனி ஆகியோர் இந்த வடிவ கிரிக்கெட்டில் எப்போதும் அபாய வீரர்கள். ஆல்-ரவுண்டர் இடத்தில் யூசுப் பத்தான் இந்தத் தொடரில் தன் திறமையை நிலைநாட்டிவிட்டால் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இவரது இடம் உறுதி. மேலும் இது இந்திய அணிக்கு மிகுந்த பலத்தைச் சேர்க்கும்.