Publish Date: Mon, 29 Aug 2016 (15:56 IST)
Updated Date: Fri, 09 Sep 2016 (11:21 IST)
நாட்டாமை தனது மனைவிக்கு அவமரியாதை செய்துவிட்டதாக பொங்கியதைத்தான் இன்றும் நமட்டு சிரிப்புடன் பேசி வருகிறது கோடம்பாக்கம்.
சொந்தமாக கட்சி வைத்திருக்கும் இவர், ஆளும் கட்சி துரத்தியதால், தேசிய கட்சியுடன் கூட்டணி பேசி, கடைசி நிமிடத்தில் துரத்திவிட்ட கட்சியிடமே அடைக்கலமாகி, ஒரேயொரு எம்எல்ஏ சீட்டுக்காக இன்னொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு... இதற்கு மேல் சொந்தக்கட்சி வைத்திருக்கும் ஒருவர் அவமானப்பட முடியாது. அதிலும், வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மற்ற வேட்பாளர்களுடன் கூட்டத்தோடு கோவிந்தாவாக நாட்டாமை இருந்த ஸ்டைலை குறிப்பிட்டு, இவ்வளவு அவமானங்களை சகிச்சுகிட்டவர் ஒரு சின்ன பெயர் விஷயத்தில் இப்படி பொங்குறாரே என சிரிக்கின்றனர்.
நாட்டாமை... இதற்கு பதிலேதும் இருக்கா?
ஒரு பெயர் விஷயம் இவ்வளவு பெரிய பிரச்சனையாச்சுன்னா, ஒரு புகைப்படம் ஒரு காதலையே கவிழ்த்திருக்கு.
இசையமைப்பாளராகவும் காமெடியனாகவும் இருக்கும் அந்த குண்டு அமுல்பேபிக்கு இன்டஸ்ட்ரியின் இளம் அழகியான நடிகையுடன் காதல். சிருஷ்டிகளில் அற்புதமான நடிகை அந்த குண்டு தோற்றத்தில் எப்படி கவிழ்ந்தார் என்று இப்போதும் இன்டஸ்ட்ரியில் ஆச்சரியம்தான்.
அந்த மாய வலையிலிருந்து விழித்தெழுந்தவர் இசையமைப்பாளருடனான காதலை கத்தரித்திருக்கிறார். நடிகை மதுவருந்தும் புகைப்படத்தை வெளியிட்டதே அவரது முன்னாள் காதலர்தான் என்றும் கூறுகிறார்கள்.
எது எப்படியே... நடிகை காதலை கத்தரித்ததால் பலருக்கும் வயிற்றில் அமிலம் சுரப்பது நின்று பால்வார்க்க ஆரம்பித்துள்ளது.
ஆள் பார்க்க ஒல்லியாக இருந்தாலும் முன்னாள் இயக்குனரும், இந்நாள் காமெடி நடிகருமான அவருக்கு மனோ பலம் அதிகம் என்கிறார்கள். அவரையே சோகத்தில் தள்ளியுள்ளது ஒரு விஷயம்.
இயக்குனர் இயமத்திடம் உதவி இயக்குனராக இருந்த காலத்திலேயே கிழக்கு சீமையிலே நடிகையுடன் நடிகருக்கு நல்ல நட்பு. இந்த நாற்பதாண்டு நட்பு, நடிகர் சங்க விஷயத்தில் இயக்குனர் எதிர்தரப்புக்கு ஆதரவு தெரிவித்ததால் டமாரென்று உடைந்தது. எனினும், தனது மகளின் திருமணத்துக்கு நடிகை அழைப்பு அனுப்புவார் என இயக்குனர் எதிர்பார்த்தார். காத்திருந்ததுதான் மிச்சம். கடைசிவரை வரவில்லையாம் அழைப்பு.
சங்க விஷயத்துக்காக சங்ககால நட்பை புறக்கணிக்கலாமா?
இது கொஞ்சம் சீரியஸான விஷயம். தெலுங்கில் தயாரான பிரமாண்ட சரித்திர படம் இந்தியாவின் பாக்ஸ் ஆபிஸை சிதறிடித்ததே... அதன் இரண்டாம் பாகத்தின் தமிழக உரிமையை பச்சை நிறுவனம் வாங்கியதாக ஒரு செய்தி வெளியாகி, வெளியான வேகத்தில் மறைந்தும் போனது. இப்போது வேறொரு நிறுவனம்தான் படத்தை தமிழில் வெளியிட உள்ளது.
முதல்பாகத்தை வெளியிட்ட பச்சை நிறுவனம் மொத்த வசூலில், சுமார் 17 கோடிகள் அளவுக்கு குறைத்து காண்பித்ததாம். அந்த விஷயம் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் தெரியவர, கடுப்பாகியிருக்கிறார்கள் இருவரும். இனிமேல் எந்தப் படத்தையும் பச்சை நிறுவனத்துக்கு தருவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்களாம். சரித்திர படத்தின் இரண்டாம் பாகத்தை அவர்களுக்கு தராததன் பின்னணி இதுதான் என்கிறார்கள்.
ஜே.பி.ஆர்.
Publish Date: Mon, 29 Aug 2016 (15:56 IST)
Updated Date: Fri, 09 Sep 2016 (11:21 IST)