கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இறைவி திரைப்படம் இரண்டு விதமான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறது. ஒன்று படத்தைப் பற்றியது, இன்னொன்று படத்தில் வரும் கதாபாத்திரத்தை பற்றியது.
படத்தைப் பற்றிய விமர்சனத்தை விட்டுவிடுவோம். அது அவரவர் ரசனை சார்ந்தது. படத்தில் வரும் கதாபாத்திரத்தை முன்னிறுத்தி கார்த்திக் சுப்பாராஜுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இறைவி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஞானவேல்ராஜாவே கார்த்திக் சுப்பாராஜுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றிருக்கிறார். அந்தளவுக்கு அவர் என்ன தப்பு செய்தார்?
இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்குமான ஈகோ யுத்தத்தில் தயாரிப்பாளர் படத்தை முடக்கி விடுகிறார். அதனையொட்டி நிகழும் சம்பவங்களே இறைவி படத்தின் கதை. படத்தில் வரும் தயாரிப்பாளர் மோசமாக சித்தரிக்கப்பட்டுள்ளார். அவர்தான் படத்தில் வில்லன். தனது படத்தை ஒரு தயாரிப்பாளரே முடக்குவாரா? கார்த்திக் சுப்பாராஜ் படம் பண்ண பணம் போட்டவரும் ஒரு தயாரிப்பாளர்தான். தயாரிப்பாளர் இல்லாமல் கார்த்திக் சுப்பாராஜ் என்ற பெயர் வெளியே தெரிந்திருக்குமா என்று தயாரிப்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் பெருமுகிறார்கள்.
இறைவி படத்தை முதலில் சி.வி.குமார் தயாரித்தார். பிறகு அபினேஷ் இளங்கோவன், ஞானவேல்ராஜா இணைந்து கொண்டனர். 1 கோடி 2 கோடிகளில் படம் செய்து கொண்டிருந்த சி.வி.குமாரை 13 கோடி ரூபாய்கள் இறைவிக்கு செலவு செய்ய வைத்துவிட்டார் கார்த்திக் சுப்பாராஜ் என்று ஞானவேல்ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அவர் சொன்ன பட்ஜெட்டே வேறு. சென்னதைவிட அதிக செலவு இழுத்துவிட்டுள்ளார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரச்சனைக்குள்ளாகியிருக்கும் இறைவி கதை மற்றும் அதன் பின்னாலுள்ள திரைமறைவு விஷயங்கள் சுவாரஸியமானவை.
கார்த்திக் சுப்பாராஜின் முந்தையப் படம் ஜிகிர்தண்டாவை தயாரித்தவர், பைவ் ஸ்டார் கதிரேசன். ஜிகிர்தண்டா படத்தின் சில காட்சிகளை நீக்கினால் மட்டுமே யு சான்றிதழ் தருவோம் என்று சென்சார் சொன்ன போது கார்த்திக் சுப்பாராஜ் மறுத்தார். ஆனால், கதிரேசன் காட்சிகளை நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். யு சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே 30 சதவீத வரிச்சலுகை கிடைக்கும் என்பதுடன், படத்தின் நீளம் அதிகம் என்று அவர் கருதினார். சென்சார் சொல்லும் காட்சிகளை நீக்கினால் தனது கதை துண்டாடப்படும் என கார்த்திக் சுப்பாராஜ் எண்ணினார். இந்த கருத்து வேறுபாது ஈகோ மோதலாக வெடித்தது.
படக்குழு கார்த்திக் சுப்பாராஜின் பக்கம் நின்றதால் கதிரேசன் அதன் பிறகு படம் தொடர்பான எதையும் கார்த்திக் சுப்பாராஜுடனோ, பிறருடனோ பகிர்ந்து கொள்ளவில்லை. படம் எப்போது வரும் என்று எங்களுக்கே தெரியவில்லை என கார்த்திக் சுப்பாராஜும், படத்தின் நாயகன் சித்தார்த்தும் வெளிப்படையாகவே குறைபட்டுக் கொண்டனர். கதிரேசனும் ரிலீஸ் தேதியை அறிவித்து பிறகு சொல்லாமல் கொள்ளாமல் தேதியை மாற்றினார். இப்படி தேதியை மாற்றுவது படத்துக்கே மைனஸnகிவிடும் என்று கார்த்திக் சுப்பாராஜ் தரப்பு குற்றஞ்சாட்டியது. மேலும், ஜுலையில் படத்தை வெளியிடுவதாக இருந்தவர் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படம் 2014 ஜுலை 18 வெளியாவதாக இருந்ததால் ஜpகிர்தண்டாவின் வெளியீட்டை மீண்டும் ஆகஸ்ட் மாதத்துக்கு மாற்றினார். கதிரேசன் தயாரிப்பாளரானது தனுஷின் பொல்லாதவன் படம் மூலம். வேலையில்லா பட்டதாரி ஓடியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தனுஷ் இருந்ததால் போட்டியாக நமது படம் வரவேண்டாம் என்று வேலையில்லா பட்டதாரிக்கு வழிவிட்டு ஜிகிர்தண்டாவின் வெளியீட்டை ஆகஸ்ட் 1 -ஆம் தேதிக்கு மாற்றினார். இதுவும் கார்த்திக் சுப்பாராஜை கோபம் கொள்ள செய்தது.
அனைவரும் கொண்டாடிய ஜிகிர்தண்டா படத்தை கதிரேசன் சரியாக புரமோட் செய்யவில்லை, ஐம்பதாவது நாள் போஸ்டர்கூட ஒட்டவில்லை என கார்த்திக் சுப்பாராஜ் குறைபட்டுக் கொண்டார். பதிலுக்கு, படத்தை எல்லோரும் பாராட்டினாலும் பல இடங்களில் படம் நஷ்டத்தையே சந்தித்தது என்று கதிரேசன் தரப்பு திருப்பியடித்தது.
இந்த மோதலை மனதில் வைத்துதான் கார்த்திக் சுப்பாராஜ் இறைவியில் தயாரிப்பாளர் கதாபாத்திரத்தை மோசமாக படைத்திருக்கிறார். அவருக்கு ரெட் போட்டேயாக வேண்டும் என்று பெரும்பாலான தயாரிப்பாளர்கள் கொதிக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் அரசியல்வாதி, போலீஸ், வக்கீல், ஆசிரியர் என்று எத்தனையோ மனிதர்களை மிகக்கீழ்த்தரமாகவும், கொடூரமானவர்களாகவும் சித்தரித்திருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு கிளம்பும் போதெல்லாம், அது வெறும் கற்பனை, ஏன் மோசமான அரசியல்வாதி, போலீஸ் இல்லையா என்றுதான் இதே தயாரிப்பாளர்கள் திருப்பி கேட்டிருக்கிறார்கள். இப்போது அவர்களில் ஒருவரை மோசமாக சித்தரிக்கும் போது மட்டும் ரெட் போடுவோம் என்று பயமுறுத்துவது சுத்த சுயநலம்.
கார்த்திக் சுப்பாராஜ் பட்ஜெட்டை இழுத்துவிட்டார் என்பது அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை. அதே போல் ஒன்றிரண்டு கோடிகளில் படம் செய்து கொண்டிருந்த சி.வி.குமாரை 13 கோடிகள் செலவு செய்ய வைத்துவிட்டார் என்பதும் அடிப்படையில்லாத குற்றச்சாட்டு.
கார்த்திக் சுப்பாராஜ் முதலில் சி.வி.குமாரை சந்தித்த போது சொன்ன கதை ஜிகிர்தண்டா. அதனை படமாக்க பல கோடிகள் வேண்டும் என்பதால், என்னுடைய பட்ஜெட் இரண்டு கோடிக்கும் கீழ். அதற்கேற்ப ஒரு கதை தயார் செய்து வாருங்கள் என்று அவர் சொல்ல, அதன் பிறகு கார்த்திக் சுப்பாராஜ் எழுதிய கதைதான் பீட்சா.
இறைவி கதையை சொன்ன போதும் முதலில் மறுத்தது போல் சி.வி.குமார் மறுத்திருக்க வேண்டியதுதானே? ஏன் மறுக்கவில்லை?
கார்த்திக் சுப்பாராஜ் படத்துக்கு இப்போது ஒரு சந்தை இருக்கிறது, போட்ட காசை எடுக்கலாம் என்ற வியாபார கணக்கில்தான் அவர் இறைவி படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டது. அதனை ஒரு தியாகம் போல் பிரகடனப்படுத்துவது தேவையா?
இறைவி பொது ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. இந்த சண்டையும், சர்ச்சையும் படத்தை இன்னும் அதிக நாள் ஓட வைத்தால் தயாரிப்பாளருக்கு நல்லது. போட்ட காசு கிடைக்கும்.
அதைத் தவிர்த்து இந்த சர்ச்சையும், தயாரிப்பாளர்களின் கோபமும் அர்த்தமற்றது.
Iraivi issue