அனுராக் காஷ்யப் படத்துக்கு 89 கட் - ஏன்? எதற்கு?
அனுராக் காஷ்யப் படத்துக்கு 89 கட் - ஏன்? எதற்கு?
அனுராக் காஷ்யபின் ஃபேண்டம் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள, உட்தா பஞ்சாப் திரைப்படத்தை ஜுன் 17 வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தனர்.
அபிஷேக் சாப்வே இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஷாகித் கபூர், கரீனா கபூர், அலியாபட் என இந்தியின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். பஞ்சாப் மாநிலம் போதைக்கு அடிமைப்பட்டிருப்பதை கொஞ்சம் காத்திரமாகவே படத்தில் காட்டியிருக்கிறார்கள்.
உட்தா பஞ்சாப் திரைப்படம் வெளியானால் ஆளும் கட்சிக்கு நெருக்கடி ஏற்படும் என்று, படத்தின் பெயரில் உள்ள பஞ்சாப் முதற்கொண்டு, படத்தில் பஞ்சாப் குறித்துவரும் அனைத்தையும் எடிட் செய்தால் மட்டுமே படத்துக்கு சான்றிதழ் தர முடியும் என்று தணிக்கை வாரியத் தலைவர் பலஜ் நிஹாலனி கூறியுள்ளார்.
நிஹாலனி தணிக்கை வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். மத அடிப்படைவாதிகளின் கருத்துகளை பிரதிபலிப்பதாக உள்ளது அவரது நடவடிக்கை என்று ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது. பாஜகவின் நம்பிக்கைக்கு உரியவர் என்பதால் நிஹாலனிக்கு அளிக்கப்பட்டதே தணிக்கை வாரியத் தலைவர் பதவி. அதனை மெயப்பிப்பதை போல், தனது செயலுக்கு அடிப்படையே இல்லா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியிடம் பணம் பெற்றுக் கொண்டு உட்தா பஞ்சாப் படத்தை அனுராக் காஷ்யப் தயாரித்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அடிப்படை இல்லாத இந்த குற்றச்சாட்டு அனைவரையும் ஆவேசப்பட வைத்துள்ளது.
இந்த விவகாரத்தில் மொத்த இந்தி திரையுலகமும் அனுராக் காஷ்யபுக்கு ஆதரவளித்துள்ளது.
மொத்த சினிமாதுறையின் நன்மைக்காக, நிஹாலனியை அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முகேஷ் பட் கூறியுள்ளார். நிஹாலனிக்கு பொய்கூட சரியாக சொல்ல தெரியவில்லை, அவர் முன் வைத்த குற்றச்சாட்டு மொத்த சினிமாதுறையையும் அவமதிப்பதாகும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அசோக் பண்டிட் கூறியுள்ளார்.
அகாலிதளம் - பிஜேபி கூட்டணி ஆட்சி பஞ்சாபில் நடக்கிறது. அவர்களது எதிரணியில் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் உள்ளது. தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஆளும் கட்சிக்கு அனுராக்கின் படம் அனர்த்தமாக அமைந்துவிடுமோ என்று பாஜக அபிமானியான நிஹாலனி இப்படியொரு நடவடிக்கையை எடுத்துள்ளார். அதற்கு வசதியாக ஆம் ஆத்மியையும், அனுராக் காஷ்யபையும் கோர்த்துவிட்டுள்ளார்.
இந்தியாவின் பெருமைமிகு இன்டிபெண்டண்ட் ஃபிலிம் மேக்கர் அனுராக் காஷ்யப். அவரை தரம்தாழ்ந்த அரசியல் தரகராக சித்தரிக்கும் நிஹாலனியின் செயல் கண்டிக்கப்பட வேண்டியது.
உட்தா பஞ்சாப் திரைப்படம் எந்த பாதிப்பும் இன்றி முழுமையாக வெளிவர வேண்டும், நிஹாலனி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இவையே ஒட்டு மொத்த கலைஞர்களின் கோரிக்கையாகும்.