தமிழ் சினிமா பேசத் தொடங்கிய பின் 1940 வரை வெளியான நூற்றுக்கணக்கான படங்களில் ஒன்றிரண்டு படங்களின் பிரதி தவிர எதுவும் நம்மிடையே இல்லை. சிலவற்றின் பெயர்கள் மட்டுமேயும். நடித்தவர்கள், படத்தின் கதை, தொழில்நுட்பக் கலைஞர்கள் எதுவும் தெரியாது. பாலுமகேந்திரா படங்கள் இயக்கத் தொடங்கியது எழுபதுகளில். அப்போது எடுத்தப் படங்களின் நெகடிவ்களும் இல்லை. ஆவணப்படுத்துவதில் தமிழ் சமூகத்தைப் போல் பொறுப்பற்ற சமூகம் வேறு இருக்க முடியாது. இதனை கவலையுடன் அணுகிய ஒரே கலைஞன் பாலுமகேந்திரா.
இன்றுவரை இதற்கான பாஸிடிவ்வான பதில் அரசிடமிருந்தோ, திரைத்துறையிடமிருந்தோ வரவில்லை.
அவர் வலியுறுத்திய இன்னொரு விஷயம் சினிமா ரசனையை பள்ளிப் படிப்பிலேயே சொல்லித் தர வேண்டும் என்பது. ஆவணக்காப்பகத்துக்கு செவி சாய்த்தவர்கள் கூட இந்தக் கோரிக்கையை பொருட்படுத்தவில்லை. சினிமாவை ரசிப்பதற்கு பயிற்சி எதுக்கு? பார்த்தா தெரிஞ்சிடப் போகுது. இதுக்கெல்லாம் வகுப்பா? இந்தாளுக்கு வேலையில்லை என காதுபட பேசிய சினிமாக்காரர்கள் இருக்கிறார்கள்.
சினிமாவை சினிமாவாகப் பார்க்கிற அடிப்படை அறிவுகூட இல்லாமல் போனதால்தான் சினிமாவால் பிரபலமடைந்த ஐந்து பேரை முதலமைச்சராக்கினோம். எழுத்துக்கூட்டிப் படிப்பதற்கே மூன்று வயதில் பள்ளிக்கு செல்ல வேண்டிய தேவை இருக்கையில் சினிமா போன்ற ஒரு கலை ஊடகத்தை புரிந்து கொள்ளவும், ரசிக்கவும் அதற்கான ரசனை பயிற்சி அவசியம். குளிப்பதும், பல் துலக்குவதும் கூட நாம் கற்றுக் கொண்டதே தவிர தானாக வந்தது இல்லை.
பரந்துபட்ட வாசிப்பனுவத்தின் வழியாகவே ஒரு இயக்குனரால் தொடர்ச்சியாக இயங்க முடியும் என்று பாலுமகேந்திரா நம்பினார். அந்த புரிதலில் இருந்து உருவானதுதான் அவரின் சினிமா ரசனை கல்வி. அதனை முடிந்த மட்டும் தனது உதவி இயக்குனர்களுக்கு அவர் ஊட்டினார். தனது சினிமா பட்டறையில் பயின்றவர்களுக்கு அது குறித்து சொல்லித் தந்தார்.
பாலுமகேந்திராவின் இந்த இரு கோரிக்கைகளுக்கும் செயல்வடிவம் தருவதற்கான முயற்சிகளை எடுப்பதே அவருக்கு நாம் செலுத்தக் கூடிய சிறந்த அஞ்சலியாக இருக்கும்.