சிங்கம் 2வைப் போன்ற ஒரு வெற்றிப் படம் ஓபனிங் மூன்று தினங்களில் செய்யும் வசூலைப் போல் மூன்று மடங்கு வசூலை பெறும் என்பது நிபுணர்களின் கருத்து. அதாவது மூன்று தினங்களில் பத்து கோடியை வசூலித்தால் அப்படம் மொத்தமாக முப்பது கோடி அளவுக்கு வசூல் செய்யும். இது மக்களின் பேராதரவை பெற்ற படங்களுக்கு மட்டுமே பொருந்தும். ஹே ஜவானி ஹைய் திவானி இதுவரை 190 கோடி அளவுக்கு வசூலித்துள்ளது. அதாவது ஒபனிங்கைப் போல் மூன்று மடங்கு. சிங்கம் 2 வின் ஓபனிங் வசூல் 50 கோடி என்றால் மொத்தமாக 150 கோடிகளை வசூலிக்க வேண்டும். மூன்று தினங்களில் முப்பது கோடிக்கு மேல் வசூலித்த துப்பாக்கி, நூறு கோடியை எட்டியது. சென்னையில் துப்பாக்கியின் முதல் ஆறு நாள் வசூல் சுமார் 4.8 கோடிகள். மொத்தமாக 14 கோடி அளவுக்கு சென்னையில் வசூலித்தது. அதாவது (சுமாராக) மும்மடங்கு. சிங்கம் 2 வின் முதல் மூன்று நாள் வசூல் 2.7 கோடி. பத்து கோடியை அனாயாசமாக தாண்டும். எனில் தயாரிப்பாளரின் கணக்குப்படி மொத்தமாக 150 கோடியை படம் தொட வேண்டும். அது சாத்தியமா?
ஒரு படம் 50 கோடியை மூன்று தினங்களில் வசூலிப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழ் சினிமாவின் பொருளாதார தூண்களை வலுப்படுத்தக் கூடியது. தயாரிப்பாளர்கள் சொல்லும் வசூல் கணக்கு எப்படி இருந்தால் என்ன, யாரை பாதிக்கப் போகிறது என்ற கருத்தும் நிலவுகிறது. வசூலை அதிகப்படுத்தி சொல்லும் போது சம்பந்தப்பட்ட ஹீரோவின் சந்தை மதிப்பும் போலியாக உயர்த்தப்படுகிறது. பத்து கோடி வாங்குகிறவர் அடுத்தப் படத்தில் பதினைந்தாக சம்பளத்தை உயர்த்திவிடுகிறார்.
சிங்கம் 2 வின் ஓபனிங் வசூல் எதுவாக இருந்தாலும் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் சம்பாதித்து தரப்போகும் வெற்றிப் படம். அதனை ஏற்கனவே படம் நிரூபித்துவிட்டது.