அரவான் - திரைக்கதையால் வந்த தோல்வி
, திங்கள், 12 மார்ச் 2012 (17:15 IST)
சரித்திரப் படம் என்றால் அந்தத் திரையரங்கு பக்கமே பலரும் போவதில்லை. மூன்று காரணங்கள்.1.
பொட்டல்வெளி, ஓலைக் குடிசைகள், அதில் பத்து பதினைந்து சட்டிப் பானைகள், திண்ணையில் தூங்கும் கிழவிகள் என்று எந்த ஃபிரேமிலும் இவர்கள்தான் செட் பிராப்பர்ட்டி.2.
பழந்தமிழ் பேசுகிறோம் என்று கோவைத் தமிழும் இல்லாமல் நெல்லைத் தமிழும் இல்லாமல் ஒரு நடுவாந்திர தமிழில் படம் நெடுக வறுப்பார்கள். காது தீயும்.3.
கஞ்சி போட்டு வெளுத்த துணியில் தூங்கி எழுவார்கள். பொட்டல் வெளியில் இவர்கள் உடையில் மட்டும் பொட்டு அழுக்கு இருக்காது. நாடகம் தோற்றுவிடும்.ஆனால் அரவானைப் பார்க்க இது எதுவும் தடையாக இருக்கவில்லை. வசந்தபாலன், காவல்கோட்டம், சாகித்ய அகாதமி, 18ஆம் நூற்றாண்டு என பல காரணங்கள். தியேட்டர் - முதல்நாள் - நிரம்பிவிட்டது. பலரும் பயந்த மேலே உள்ள மூன்று காரணங்களையும் வசந்தபாலனும் அவரது டீமும் ஓரளவு திறமையாகவே கடந்திருந்தார்கள். பாளையக்கார அரசருக்குக்கூட ஆடம்பரமான ஆனால் அப்படி தெரியாத உடை. அந்தப்புர அரவாணி முதல் கூத்துக்காரரின் சற்றே பெரிய கோவணம் வரை எல்லாமே பார்த்து செய்திருக்கிறார்கள். பரத்துக்கு மட்டும் அபோகலிப்டோ ஆதிவாசியைப் போலொரு கெட்டப். ஊர் ஊராக அத்தர் விற்பதால் இருக்கலாம். இன்னொரு நெருடல் தாசியின் உடை. இன்றைய மயிலாப்பூர் மாமியை பார்ப்பது போலிருக்கிறது. இன்னொரு ஆச்சரியம் நடிகர்களின் திராவிட கலர். பொறுக்கி எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. பற்களில் மஞ்சளையும், சிவப்பையும் ஒருத்தர் பாக்கியில்லாமல் தீட்டியிருக்கிறார்கள். 18ஆம் நூற்றாண்டில் பல் விளக்க மாட்டார்கள் என்று எங்காவது சு.வெங்கடேசன் வாசித்திருக்கலாம்.
சரித்திரப் படங்களை சரித்திரப் படங்களாக்குவது ஒளிப்பதிவும், இசையும். அரவானில் பாதி இரவுக் காட்சி. யதார்த்தமா காட்டுறேன் என்று திரையை முழு இருட்டாக்கவும் கூடாது, அதேநேரம் பார்வையாளனுக்கு தெரியாமல் போகக் கூடாது என்று பகல் 12 மணி வெளிச்சத்திலும் எடுக்கக் கூடாது. இந்த பிரச்சனையை அழகாக கையாண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஆனால், அட போட வைக்கிற கேமராக் கோணமோ, ஒளிப்பதிவோ இல்லை. காலை வெயிலுக்கும், சாயங்கால வெயிலுக்குமே ஆறு வித்தியாசங்கள் உண்டு. அதையெல்லாம் எப்போது தமிழ்ப் படமொன்றில் பார்க்கப் போகிறோமோ.நிலா பாடல்தான் ஒஸ்தி என்று பலரும் சொன்னாலும் மற்றப் பாடல்கள்தான் படத்தின் தன்மைக்கு பொருந்தி வருகின்றன. நிலா படத்துக்கு பொருந்தாத ஃபேண்டஸி. தூங்கிக் கொண்டே தவில் வாசித்த மாதிரி அவ்வப்போது காட்சியிலிருந்து நழுவிச் செல்கிறது பின்னணி இசை. அதேபோல் சாமி சம்பந்தப்பட்ட காட்சிகளில் செண்டை முழுக்கம் கேட்கிறது. உண்மையில் அது செண்டைதானா, இல்லை அதுபோன்று ஒலிக்கும் தமிழர்களின் ஏதேனும் இசைக்கருவியா?நடிப்பைப் பொறுத்தவரை ஆதியின் ஆஜானுபாகுவான உடம்பே பாதி வேலையை செய்துவிடுகிறது. பசுபதி களவாணி வேடத்தில் கச்சிதம். கரிகாலன்தான் நெருடல். அறிமுகமான படத்திலிருந்து ஆணகழன் போட்டிக்கான மேடையில் நிற்பது போல தம் கட்டிதான் நிற்கிறார்... நடக்கிறார்... யாராவது அவரை அந்த மேடையில் இருந்து இறக்கிவிட்டால் நல்லது.மற்ற சரித்திரப் படங்களுடன் ஒப்பிடுகையில் அரவானின் கதை சுவாரஸியமானது. கிராமம் ஒன்றில் ஒருவன் கொல்லப்படுகிறான். செத்தவனையும் தெரியாது கொன்றவனையும் தெரியாது. பிறகுதான் செத்தவன் அந்த ஊருடன் பல தலைமுறைகளாக பகைமை பாராட்டும் ஊரைச் சேர்ந்தவன் என்று தெரிய வருகிறது. இரண்டு ஊர்களுக்கும் பெரிய யுத்தமே வெடிக்கிற சூழ்நிலை. மோதலை தவிர்க்க வரும் பாளையக்கார அரசர், செத்துப் போனவனுக்கு பதிலாக மற்ற கிராமத்தைச் சேர்ந்த ஒருவனை பலியாக தர வேண்டும் என்று வித்தியாசமான தீர்ப்பை வழங்குகிறார். சண்டை நடந்தால் பல தலைகள் உருளும் என்பதால் ஒத்துக் கொள்கிறார்கள். பலியாக ஒருவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான்.பலி நாள் நெருங்கும் போது, யாரோ செய்த கொலைக்கு நாம பலியாக வேண்டுமா என்று பலியாளுக்கு வெறுப்பு தட்டுகிறது. உண்மையான கொலையாளியை துப்பு துலக்க ஆரம்பிக்கிறான். கடைசியில் கொலையாளி யார் என்பதையும் கண்டு பிடிக்கிறான். துரதிர்ஷ்டவசமாக கொலையாளி ஆற்றோடு போக, பலியாளும் படுகாயமடைகிறான். பலி கொடுக்கும் நாளில் அவனால் ஊருக்கு செல்ல முடியாமல் போகிறது.
பலியாள் ஓடிப் போனதாக நினைக்கும் ஊர்க்காரர்கள் அவனுக்குப் பதில் அவன் நண்பனை பலி கொடுக்கிறார்கள். நண்பனின் சாவுக்கு பலியாள் ஓடிப்போனதுதான் காரணம் என்பதால் அவனை நண்பனின் மகனின் கையால் சாகடிக்க வேண்டும் என்று சபதமும் செய்கிறார்கள். சில நாட்கள் கழிந்து பலியாள் ரகசியமாக வீடு திரும்புகிறான். ஊர்க்காரர்கள் அவனை பலியிடாமல் இருக்க பத்து வருடங்கள் தலைமறைவாக இருக்கும்படி அவனது மாமா அறிவுறுத்துகிறார். பத்து வருடங்கள் கழிந்தால் ஒருவனை பலியிடக் கூடாது என்பது ஊர் வழக்கம். உயிர் ஆசையில் பலியாளும் தலைமறைவாகிறான். ஒன்பது வருடங்களை வெற்றிகரமாக கடத்தும் அவன் துரதிர்ஷ்டவசமாக எதிரி கையில் சிக்கி கடைசியில் உயிரை விடுகிறான்.சந்தேகமில்லாமல் இதுவொரு நல்ல த்ரில்லர். குறைவில்லாத கலை இயக்கம், காஸ்ட்யூம், நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, கதை எல்லாமிருந்தும் அரவான் நிறைவான அனுபவத்தை தந்ததா என்றால், இல்லை. உணர்வேயில்லாத நிகழ்வுகளின் தொகுப்பாகிப் போன திரைக்கதையும், களவு பற்றிய காட்சிகளின் திணிப்பும் நல்ல அனுபவத்தை தர தவறிவிட்டன. மேலே உள்ள கதையில் படத்தில் பாதியை ஆக்கிரமிக்கும் பசுபதிக்கு என்ன வேலை? பசுபதியுடனான நட்பு காரணமாக ஆதி தான் யார் என்ற உண்மையை வெளியிடுகிறான். அப்போது கரிகாலனும் அவனது ஆட்களும் ஆதியை பிடித்துக் கொள்கிறார்கள். இந்த சின்ன விஷயத்தைத் தவிர பசுபதி கேரக்டருக்கான தேவையே படத்தில் இல்லை. ஆதி பிடிபடுவதற்கான காரணத்தை உருவாக்க பாதி படத்தை செலவிட்டிருக்கிறார்கள். ஒருவேளை களவு பற்றிய காட்சிகள் சுவாரஸியமாக இருக்கும் என்று இயக்குனர் நினைத்திருக்கலாம். ஆனால் கதைக்கு பொருந்தக் கூடிய காட்சிகள்தான் சுவாரஸியமே தவிர கதைக்குப் பொருந்தாத விஷயம் எவ்வளவு சுவாரஸியமாக இருந்தாலும் அது படத்தை காலி செய்துவிடும். அதுதான் அரவானிலும் நடந்திருக்கிறது.