Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்னி - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

கன்னி - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)
, வெள்ளி, 14 நவம்பர் 2014 (12:48 IST)
காதலை மதிக்கும் நீங்கள், கனிந்த மனசுக்கு சொந்தகாரர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் பாதச் சனியாக அமர்ந்து உங்களை பல வகையிலும் சனிபகவான் கொடுமைப்படுத்தினாரே! பணப்பற்றாக்குறையையும், குடும்பத்தில் பிரச்னைகளையும், உங்களை ஏடாகூடமாகவும் பேச வைத்த சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் 3-ம் வீட்டில் வலுவாக அமர்வதால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். தோல்வி முகம் மாறும். இனி முதல் முயற்சியிலேயே எல்லாக் காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள்.

தன்னம்பிக்கை துளிர்விடும். தொலைநோக்குச் சிந்தனையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அறிவுப்பூர்வமாகவும், அனுபவப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்கள் ஆலோசனைகளையும் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். தைரியமாகவும், தன்னிச்சையாகவும் செயல்படத் தொடங்குவீர்கள். முக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பீர்கள். இனி மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவீர்கள். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் விலகும். சந்தோஷம் பெருகும். மகளுக்கு வரன் தேடி அலுத்துப் போனீர்களே! இனி நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல வரன் வந்தமையும்.

குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். பழைய வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உங்களை எதிர்த்தவர்களெல்லாம் நட்பு பாராட்டுவார்கள். சிலர் கொஞ்சம் கடன்பட்டு வீடு, மனை வாங்குவீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உங்களை ஏளனமாகவும், இழிவாகவும் பேசியவர்களெல்லாம் உங்களிடம் மனம் திருந்தி வந்து மன்னிப்புக் கேட்பார்கள். அறிஞர்கள், நண்பர்கள் சிலரின் கருத்துக்களை கேட்டு அதன்படி நடந்துக் கொள்வீர்கள். தூக்கமில்லாமல் தவித்தீர்களே! அந்த நிலை மாறும். இனி ஆழ்ந்த உறக்கம் வரும். உங்களைத் தவறாகப் புரிந்துக் கொண்டு விலகிச் சென்ற பழைய உறவினர், நண்பர்கள் வலிய வந்து உறவாடுவார்கள்.
       
சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
 
16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் சுக-சப்தமாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் 3-ம் வீட்டில் சனி செல்வதால் தைரியம் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு பாதச் சனியாக 2-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் பேச்சால் பிரச்னைகள் வரும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. 
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பாதியில் நின்ற வேலைகளெல்லாம் விரைந்து முடியும். என்றாலும் பழைய கடனை நினைத்து அவ்வப்போது குழம்புவீர்கள். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்கள் உங்களை சரியாக மதிக்கவில்லையென்றெல்லாம் ஆதங்கப்பட்டுக் கொள்வீர்கள்.    
   
உங்கள் சுகாதிபதியும்-பூர்வ புண்யாதிபதியுமான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்தை பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு வேலை அமையும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் தீரும். வாகனம் சிலர் வாங்குவீர்கள். 
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் செலவுகளும் இருக்கும். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். வரன் வீட்டாரைப் பற்றி விசாரித்து முடிப்பது நல்லது. அவ்வப்போது கோபப்படுவீர்கள். கடந்த காலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள்.
 
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகமாகும். சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். சமையலறையை நவீனமாக்குவீர்கள்.      
 
08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் சளித் தொந்தரவு, தொண்டை புகைச்சல், கழுத்து வலி வந்துப் போகும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் சின்ன சின்ன பிரச்னைகள் வந்துப் போகும். 
 
சனிபகவான் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு அவர்களை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிப் பெண்கள் எடைமிகுந்தப் பொருட்களை தூக்க வேண்டாம். சனிபகவான் 9-ம் வீட்டை பார்ப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். தந்தையாருக்கு முதுகுத் தண்டில் வலி, மூச்சுப் பிடிப்பு வந்துப் போகும். சனிபகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் திடீர் பயணங்கள், வீண் அலைச்சல், கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்துப் போகும். மகான்கள், சித்தர்களின் தொடர்பு கிடைக்கும்.     
 
வியாபாரம் சூடுபிடிக்கும். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். ராஜதந்திரத்தை கற்றுக் கொள்வீர்கள். சந்தை நிலவரத்தையும், வாடிக்கையாளர்களின் ரசனைகளையும் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புது முதலீடுகள் செய்வீர்கள். சிலர் சில்லரை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். கடன் உதவிகள் கிடைக்கும். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். உத்தியோகத்தில் ஓரங்கட்டி ஒதுக்கப்பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் வேலைச்சுமை குறையும். பதவி உயர்விற்காக உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். சம்பள பாக்கி கைக்கு வரும். 
 
கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். பெற்றோர் உங்களுடைய ஆசைகளை, எண்ணங்களை நிறைவேற்றி வைப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். திருமணம் விரைந்து முடியும். மாணவ-மாணவிகளே! நினைவாற்றல் கூடும். படிப்பிலே முன்னேறுவீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் பதக்கம் வெல்வீர்கள். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். 
 
இந்த சனி மாற்றம் எல்லாவற்றையும் இழந்து தவித்துகொண்டிருந்த உங்களை ஆடம்பரமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும். 
 
பரிகாரம்:
திருஇந்துளூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபரிமளரங்கநாதரை ஏகாதசி திதி நடைபெறும் நாளில் அல்லது திருவோணம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் மலர் மாலை அணிவித்து வணங்குங்கள். காது கேளாதவர்களுக்கு உதவுங்கள்.  

Share this Story:

Follow Webdunia tamil