Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துலாம்-சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

துலாம்-சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)
, வெள்ளி, 14 நவம்பர் 2014 (12:44 IST)
அல்லது செய்தவர்க்கும் நல்லதே செய்யும் நீங்கள், நாலும் தெரிந்தவர்கள். இதுவரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாக இருந்து உங்களை வெடித்து சிதற வைத்தார். எப்போதும் பிரச்னையிலேயே மூழ்கி கிடந்தீர்களே! இப்படி உங்களை வாட்டி வதைத்த சனிபகவான் இப்பொழுது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகி பாதச் சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார். உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் 2-ம் வீட்டிற்கு வந்தமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை நீங்கும்.

அழகு, இளமைக் கூடும். எப்போது பார்த்தாலும் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலையுடன், சோகம் படர்ந்திருந்த உங்கள் முகத்தில் இனி சந்தோஷம் பொங்கும். மற்றவர்களின் பிரச்சனைகளை கையிலெடுத்து நீங்கள் சிக்கலில் சிக்கித்தவித்தீர்களே! வீட்டு விசேஷங்களில் கூட உங்களை அவமானப்படுத்தி உங்களை ஒதுக்கி வைத்தார்களே! அந்த தர்மசங்கடமான நிலைகளிலிருந்து விடுபடுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் எப்போதும் ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவியதே இனி மகிழ்ச்சிப் பொங்கும்.

வீண் சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேருவீர்கள். இனி அன்யோன்யம் அதிகரிக்கும். மற்றவர்களின் மனநிலையை உணரத் தொடங்குவீர்கள். என்றாலும் பாதச்சனியாக வருவதால் வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். குடும்பத்திலும் அவ்வப்போது சலசலப்புகள் வரும். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது.

கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, பல் வலி, காது வலி வந்துப் போகும். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. நெருக்கடியான நேரத்தில் உங்களை பயன்படுத்தி விட்டு கருவேப்பில்லையாய் தூக்கி எறிந்துவிட்ட நண்பர்கள், உறவினர்களை நினைத்து ஆதங்கப்படுவீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வழக்கை நினைத்து அவ்வப்போது நிம்மதி குறையும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். பிள்ளைகளிடம் எதிர்மறையாகப் பேச வேண்டாம்.  

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் திருதியாதிபதி-சஷ்டமாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதம் 2-ம் வீட்டில் சனி செல்வதால் எதிர்பார்த்த வேலைகள் முடியாவிட்டாலும் எதிர்பாராத சில காரியங்கள் முடிவடையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். 
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நெஞ்சு எரிச்சல், தலைச்சுற்றல், அல்சர், வாயுக் கோளாறால் வயிற்று வலி, வீண் விரையம், விரக்தி, ஏமாற்றம் வந்துப் போகும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். சில நேரங்களில் தோற்றுவிடுவோமோ என்ற அவநம்பிக்கை வந்துப் போகும்.
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். நீண்ட நாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். வேற்றுமதத்தவர்கள், மாநிலத்தவர்களால் உதவிகள் உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும்.
 
உங்கள் யோகாதிபதியான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் குடும்ப வருமானம் உயரும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள். பழைய இனிய அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். புது வேலைக் கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும்.   
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில்  சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் பிறர் மீது நம்பிக்கையின்மை, வீண் டென்ஷன், எதிலும் ஆர்வமின்மை, பழைய நண்பர்களுடன் பகைமை வந்து நீங்கும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். பூர்வீக சொத்தில் மராமத்து பணிகள் செய்வீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது.
 
16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் பாக்யாதிபதியும்-விரையாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். சிலர் வீடு கட்டத் தொடங்குவீர்கள். வெளிநாட்டில் அல்லது அண்டை மாநிலத்தில் வேலைக் கிடைக்கும். பணம் வரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பயணம் உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் அல்லாதவர்கள் என்பதை கண்டறிவதில் தடுமாற்றம் வரும்.    
 
08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் மாறுபட்ட யோசனைகள் பிறக்கும். புது நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும்.              
     
சனிபகவான் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள், தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து விலகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகமாகும். 8-ம் வீட்டை பார்ப்பதால் வீண் அலைச்சல், சிறுசிறு விபத்துகள், நோய் இருப்பதைப் போன்ற பயம் வந்து நீங்கும். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். லாப வீட்டைப் பார்ப்பதால் திடீர் செல்வம், செல்வாக்குக் கூடும். சபைகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.  
 
வியாபாரத்தில் மற்றவர்களின் பேச்சை கேட்டு அளவுக்கு அதிகமாக முதலீடுகள் செய்து நட்டப்பட்டீர்களே! இனி லாபம் வரும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் சிடுசிடுவென பேசும் பணியாளை நீக்கி விட்டு அன்பாக அரவணைப்பாக பேசும் வேலையாட்களை நியமானம் செய்வீர்கள். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

கண்ஸ்டக்ஷன், ஸ்டேஷனரி, ஏற்றுமதி-இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் அமைதியான சூழல் உருவாகும். மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியை கவர்வீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும் என்றாலும் அவர்களுடன் அளவாகப் பழகுங்கள். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். அதிக சம்பளத்துடன் சலுகைகளும் கிட்டும்.
 
கன்னிப்பெண்களே! பாதச் சனி தொடர்வதால் காதல் விவகாரத்தில் மூக்கை நுழைக்காதீர்கள். அன்பாக பேசிபவர்களையெல்லாம் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாற வேண்டாம். திருமணம் நிச்சயமாகும். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள்.
 
மாணவ-மாணவிகளே! இனி புத்தகத்தைத் தொட்டால் தூக்கம் வராது. மொழி அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நல்லவர்களின் நட்பால் முன்னேறுவீர்கள். பேருந்தில் பயணிக்கும் போது படிக்கட்டுகளில் நின்று செல்ல வேண்டாம். விளையாடும் போது கவனம் தேவை. சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.
இந்த சனி மாற்றம் கொஞ்சம் அலைச்சலையும், செலவினங்களையும் தந்தாலும், உங்களை முன்னேற்றப் பாதைக்கும் அழைத்துச் செல்லும்.
 
பரிகாரம்:
திருப்புன்கூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசிவலோகநாதரை சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள். வாய்ப் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். 

Share this Story:

Follow Webdunia tamil