Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கும்பம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)

கும்பம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் (16.12.2014 முதல் 17.12.2017)
, வெள்ளி, 14 நவம்பர் 2014 (12:29 IST)
குனியக் குனியக் குட்டினாலும் கோபப்படாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம் தட்டிவிட்டதுடன், கையில் ஒரு காசும் தங்கவிடாமல் துடைத்தெடுத்த உங்கள் ராசிநாதன் சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் 10-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். மனப்போராட்டங்கள் ஓயும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

உங்களுடைய ஆலோசனைக்கு இனி முக்கியத்துவம் தருவார்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த ஈகோப் பிரச்னை, வீண் சந்தேங்களெல்லாம் விலகும். இருவரும் மனம் விட்டு பேசி சில முடிவுகள் எடுப்பீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். தந்தையாரின் உடல் நலம் சீராகும். தந்தைவழி உறவினர்களுடனான கசப்புணர்வுகள் நீங்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ. ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். வங்கி கடன் உதவி கிடைக்கும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

சொந்த ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். 

சனிபகவான் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:
 
16.12.2014 முதல் 24.01.2015 வரை மற்றும் 30.04.2015 முதல் 13.6.2015 வரை மற்றும் 06.9.2015 முதல் 17.10.2015 வரை உங்கள் தனாதிபதி குருவின் சாரத்தில் விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் 10-ம் வீட்டில் சனி செல்வதால் சமயோஜிதமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். வாகன வசதியுண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும்.  
 
14.6.2015 முதல் 5.9.2015 வரை உங்கள் ராசிக்கு 9-ம் வீடான துலாம் ராசி விசாகம் நட்சத்திரம் 3-ம் பாதத்தில் சனி செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். பணம் வந்தாலும் பற்றாக்குறையும் நீடிக்கும். தந்தையாருடன் மோதல்கள், அவருக்கு மருத்துவச் செலவுகளும் வந்துப் போகும். 
 
30.04.2015 முதல் 01.08.2015 வரை குருபகவானின் விசாகம் நட்சத்திரத்திலேயே சனி வக்கரித்து செல்வதால் புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பிரிவுகள், விபத்துகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். மகான்கள், சித்தர்களின் ஜீவசமாதி சென்று வருவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். 
 
உங்கள் ராசியாதிபதியும்-விரயாதிபதியுமான சனிபகவான் தன் சுய நட்சத்திரமான அனுஷம் நட்சத்திரத்தில் 25.01.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 18.10.2015 முதல் 15.11.2016 வரை செல்வதால் இக்காலக்கட்டத்தில் உங்களிடம் மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வீடு கட்டுவீர்கள். பழுதான மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். புது வேலைக் கிடைக்கும். 
 
15.3.2015 முதல் 29.04.2015 வரை மற்றும் 19.5.2016 முதல் 12.08.2016 வரை உள்ள காலக்கட்டங்களில் சனிபகவான் அனுஷம் நட்சத்திரத்திலேயே வக்ரமாவதால் சொத்துப் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. மனைவி வழி உறவினர்களுடன் பிணக்குகள் வரும். விலையுயர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நட்பால் ஆதாயமடைவீர்கள். 

16.11.2016 முதல் 17.12.2017 வரை உங்கள் அஷ்டம-பூர்வ புண்யாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் உங்களின் அடிப்படை வசதிகள் பெருகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகன் கூடாபழக்கங்களிலிருந்து விடுபடுவார். பூர்வீக சொத்தில் சில மாற்றம் செய்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.  
 
08.04.2017 முதல் 5.08.2017 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்திலேயே சனி வக்ரமாகி செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், முன்கோபம், எதிலும் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.  
 
சனிபகவான் 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மனஸ்தாபதம் வந்து நீங்கும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்ற வேண்டி வரும். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும். சனிபகவான் 7-ம் வீட்டை பார்ப்பதால் கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. மனைவிக்கு அடிவயிற்றில் வலி, இரத்த அழுத்தம் வந்துச் செல்லும். ஆனால் வி.ஐ.பிகளின் அறிமுகம் கிடைக்கும். சனிபகவான் 12-ம் வீட்டை பார்ப்பதால் திருமணம், சீமந்தம் போன்ற சுப செலவுகள் அதிகமாகும். சில நாளில் தூக்கம் குறையும்.  
      
வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு லாபத்தை உயர்த்துவீர்கள். போட்டியாளர்கள் திகைக்கும் அளவிற்கு சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். வராமலிருந்த பாக்கிகளும் வசூலாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். ஷேர், ஸ்பெகுலேஷன், ஹோட்டல் மூலம் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். 
 
10-ம் வீட்டில் சனி வந்தமர்வதால் உத்தியோகத்தில் உயர்வு உண்டு. உயரதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். என்றாலும் வதந்திகளும், வீண் பழியும் வரக்கூடும். திடீர் இடமாற்றம் உண்டு. வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். சக ஊழியர்களில் ஒருசிலர் இரட்டை வேடம் போடுவதையும் நீங்கள் உணர்ந்துக் கொள்வீர்கள். அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். சிலருக்கு அயல்நாட்டு நிறுவனங்களில் புது வாய்ப்புகள் வரும். 
கன்னிப் பெண்களே! போலியாக பழகியவர்களிடமிருந்து ஒதுங்குவீர்கள். காதல் வேறு, நட்பு வேறு என்பதை உணருவீர்கள். சிலருக்கு அண்டை மாநிலத்தில் வேலைக் கிடைக்கும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். 
 
மாணவ-மாணவிகளே! படிப்பில் முன்னேறுவீர்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். இந்த சனி மாற்றம் குடத்தில் விழுந்த விளக்காய் இருந்த உங்களை கோபுர விளக்காய் ஒளிர வைக்கும்.
 
பரிகாரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகிலுள்ள மொரப்பாண்டி எனும் ஊரில் அபய முத்திரையுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீபஞ்சலோக சனீஸ்வரரை எள் தீபமேற்றி வணங்குங்கள். திருநங்கைகளுக்கு உதவுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil