Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - விருச்சிகம்

ராகு-கேது பெயர்ச்சி ராசி பலன் - விருச்சிகம்
, வியாழன், 19 ஜூன் 2014 (13:33 IST)
திறமைகள் அதிகமிருந்தாலும், நிறைகுடம் ததும்பாது என்பதனைச் சுட்டிக் காட்டுபவர்களே! உங்களுக்கு 21. 06. 2014 முதல் 08. 01. 2016 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.  
 
இராகுவின் பலன்கள்: 
 
இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டில் அமர்ந்து கொண்டு அலைக்கழிப்புகளையும், அடுக்கடுக்கான செலவுகளையும், தூக்கமின்மையையும், எதிர்காலம் பற்றிய பயத்தையும் ஏற்பத்திய ராகுபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்கு வருவதால் உங்களின் செல்வம், செல்வாக்குக் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். 
 
உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் திருப்பித் தருவார்கள். பங்குச் சந்தை மூலமும் லாபம் வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். அனுபவப் பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வருவீர்கள். மூத்த சகோதர வகையில் மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். 
 
குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புது பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். பூர்வீக சொத்தை மாற்றி புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். மனதில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களை தூக்கி எறிவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். 
 
அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். தள்ளிப் போன திருமண முயற்சிகள் பலிதமாகும். மனைவிவழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். உடல் ஆரோக்யம் சீராகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டத்தை வாங்கி தருவீர்கள். 

இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்கள் ராசிநாதனும்-சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 24. 10. 2014 வரை ராகுபகவான் செல்வதால் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். சகோதரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வழக்கு சாதகமாகும். வெளியூர் பயணங்களால் ஆதாயமடைவீர்கள்.  
 
பாக்யாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 25. 10. 2014 முதல் 03. 06. 2015 வரை ராகுபகவான் செல்வதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வி. ஐ. பிகளின் நட்பு கிடைக்கும். மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். தந்தையாரின் ஆரோக்யம் சீராகும். அவருடனான மோதல்களும் விலகும். பாகப்பிரிவினை சுமூகமாக முடியும். சொந்த-பந்தங்களின் பலம், பலவீனம் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். 
       
ராகுபகவான் உங்களின் ஜுவனாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 04. 06. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். அரைக்குறையாக நின்ற கட்டிட வேலைகளை துரிதப்படுத்துவீர்கள். சிலர் புது வீட்டிற்கு குடிப் புகுவீர்கள். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் புது வேலைக் கிடைக்கும். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கைக்கு வரும். சொந்த ஊர் பொது காரியங்களையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.  
 
மாணவ-மாணவிகளே! விரும்பிய கல்விப் பிரிவில், எதிர்பார்த்த நிறுவனத்தில் இடம் கிடைக்கும். மதிப்பெண் கூடும். வகுப்பறையில் சக மாணவர்கள் வியக்கும்படி ஆசிரியரைக் கேள்வி கேட்பீர்கள்.   
 
கன்னிப் பெண்களே! உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வேற்றுமொழிப் பேசுபவர்கள் நண்பர்களாக அறிமுகமாவார்கள். உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புது வேலையும் கிடைக்கும். 
 
கலைத்துறையினரே! விமர்சனங்கள், கிசுகிசுக்களிலிருந்து விடுபடுவீர்கள். பெரிய நிறுவனங்களின் வாய்ப்புகள் வரும். வருமானம் உயரும். உங்களின் படைப்புத் திறன் வளரும். 
 
வியாபாரிகளே! புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். பற்று வரவு உயரும். உங்கள் ரசனைக் கேற்ப கடையை அழகுப்படுத்தி, நவீனமாக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். புரோக்கரேஜ், ஸ்பெக்குலேஷன், அழகு சாதனப் பொருட்கள், கம்பியூட்டர் உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவியில் அமர்வீர்கள். பங்குதாரர்கள் மத்தியில் இருந்த சலசலப்புகள் நீங்கும். மதிப்புக் கூடும்.  
 
உத்தியோகஸ்தர்களே! உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். பதவி உயர்விற்கான தேர்வில் வெற்றி பெற்று புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் சிலருக்கு வேலை அமையும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும்.    
 

கேதுவின் பலன்கள்: 
 
இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்ததுடன், வி. ஐ. பிகளின் பட்டியலில் உங்களை இடம் பிடிக்க வைத்த கேது பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய வீடான ஐந்தாம் வீட்டிற்குள் வந்து அமர்கிறார். எனவே புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் கேது அமர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் தடை, தாமதங்கள் ஏற்படும். 
 
பூர்வீக சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். பிள்ளைகளை ஆரம்பத்திலிருந்தே இன்னும் கொஞ்சம் கண்டித்து வளர்த்திருக்கலாமென இப்போது நினைப்பீர்கள். அவர்களின் முரட்டுத் தனத்தை அன்பால் மாற்றுங்கள். குடும்பத்தினருடன் செலவிடக்கூடிய நேரம் குறையும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்களும் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். 
 
உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேறுவோம் என்ற முடிவுக்கு வருவீர்கள். தவணை முறையில் பணம் செலுத்தி புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள், சலசலப்புகள் உண்டாகும். அதிக உரிமை எடுத்துக் கொண்டு யாரிடமும் பேசவோ, பழகவோ வேண்டாம். பழைய கடன் பிரச்னைகளை நினைத்து கலங்குவீர்கள். இதுநாள் வரை கட்டிக் காப்பாற்றிய கௌரவம், நல்ல பெயரை எல்லாம் இழந்துவிடுவோமோ என்ற ஒரு பயமும் இருக்கும். முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்களை பற்றி கவலைப்படாதீர்கள். 
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 
 
உங்களின் அஷ்டமாதிபதியும்-லாபாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 21. 06. 2014 முதல் 27. 02. 2015 வரை கேதுபகவான் செல்வதால் கை, கால் அசதி, சோர்வு, தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, காய்ச்சல் வந்து நீங்கும். மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும்.  
 
உங்கள் சேவகாதிபதியும்-சுகாதிபதியுமான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 28. 02. 2015 முதல் 04. 11. 2015 வரை கேது செல்வதால் கடந்த கால கசப்பான அனுபவங்களை நினைத்துப் பார்த்து தூக்கத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வேற்றுமதத்தை சார்ந்தவர்களால் ஆதாயமடைவீர்கள். ஒரு சொத்தை விற்று சில பிரச்னைகளிலிருந்து வெளி வருவீர்கள். இளைய சகோதர வகையில் விவாதங்கள் வந்தாலும் பாசம் குறையாது. 
 
வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் உதவிகள் உண்டு. தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அவருக்கு மூச்சுத் திணறல், மூட்டு வலி வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.   
  
கேதுபகவான் தன-பூர்வ புண்யாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 05. 11. 2015 முதல் 08. 01. 2016 வரை செல்வதால் புதிய முயற்சிகள் பலிதமாகும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். குடும்பத்திலும் கலகலப்பான சூழல் உருவாகும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். சொந்த-பந்தங்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.    
 
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தையும், மக்களின் ரசனைகளையும் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப பொருட்களை கொள்முதல் செய்து லாபம் ஈட்டப் பாருங்கள். பெரிய முதலீடுகள் வேண்டாம். வேலையாட்கள் கொஞ்சம் முரண்டு பிடிப்பார்கள். பழைய சரக்குகளை தள்ளுபடி விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். 
 
உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்கு தகுதாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது. 
 
இந்த ராகு மாற்றம் திடீர் யோகங்களையும், அந்தஸ்தையும் தருவதாகவும், கேது மாற்றம் அவ்வப்போது முன்கோபத்தையும், மனஇறுக்கத்தையும் தருவதாக அமையும்.  
 
பரிகாரம்
 
நாகப்பட்டினத்தில் அருளும் காயாரோகணேஸ்வரரையும், நீலாயதாட்சியையும் தரிசித்து வாருங்கள். ஆரம்பக்கல்வி போதித்த ஆசிரியருக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள். 

Share this Story:

Follow Webdunia tamil