Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துலாம் - 2016 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

துலாம் - 2016 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்
, திங்கள், 28 டிசம்பர் 2015 (17:07 IST)
மனித நேயத்துடன் உதவுபவர்களே! உங்கள் ராசிக்கு பதினோராவது வீட்டில் இந்த 2016-ம் ஆண்டு பிறப்பதால்  பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.

வீடு கட்டும் வேலையை தொடங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். வி.ஐ.பிகள் மத்தியில் பிரபலமாக பேசப்படுவீர்கள். பதவிகள் தேடி வரும். சுருங்கிய முகம் மலரும். வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நவீன ரக வாகனம் மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். மற்றவர்களின் மனநிலையைப் புரிந்துக் கொள்ளத் தொடங்குவீர்கள். வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும்.
 
சூரியனும், புதனும் 3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தாண்டு பிறப்பதால் அரசுக் காரியங்கள் முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வீடு கட்ட எதிர்பார்த்த பணம் வரும். கட்டிட வரைபடமும் அப்ரூவலாகும். நெருங்கிய உறவினர்கள் பிரச்னைகளில் தலையிட்டு அதை தீர்த்து வைக்க உதவிகள் செய்வீர்கள். இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். பழைய சிக்கல்களை புதிய கோணத்தில் அணுகி வெற்றி காண்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். வாய்தா வாங்கி தள்ளிப் போன வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். நண்பரின் கல்யாணத்தை முன்னின்று நடத்துவீர்கள். வேலைக்காக நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்று காத்திருந்தவர்களுக்கு அழைப்பு வரும்.
 
இந்தப் புத்தாண்டின் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சுக்ரன் சனியுடன் சேர்ந்து நிற்பதால் சளித் தொந்தரவு, தொண்டை எரிச்சல், மூச்சுத் திணறல், சிறுசிறு விபத்துகள் வந்துச் செல்லும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். செல்போன், லேப்-டாப், ஃப்ரிட்ஜ் போன்ற மின்சார சாதனங்கள் பழுதாகும்.
 
புத்தாண்டின் தொடக்கம் முதல் 07.02.2016 வரை மற்றும் 02.08.2016 முதல் வருடம் முடியும் வரை உங்களின் சஷ்டம-தைரியஸ்தானாதிபதியான குரு 12-ம் வீட்டில் மறைவதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகமாகும். எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். கனவுத் தொல்லை, தூக்கமின்மை வந்துச் செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள்.
 
பைனான்ஸ் தொழில் செய்பவர்கள் தகுந்த ஆதாரமில்லாமல் யாருக்கும் பணம் தரவேண்டாம். இளைய சகோதர வகையில் அலைச்சல் அதிகரிக்கும். பழைய கடன் பிரச்னையால் சேர்த்து வைத்திருக்கும் கௌரவத்திற்கு ஏதேனும் பங்கம் வந்துவிடுமோ என்ற அச்சம் அடிமனதில் இருந்துக் கொண்டேயிருக்கும். வருங்காலம் குறித்த கவலைகளும் வந்துச் செல்லும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள், பிரேக்கெல்லாம் சரி பார்த்துச் செல்வது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.
 
இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கோவில் கும்பாபிஷேகத்திற்கு தலைமைத் தாங்குவீர்கள். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். கோவில் கும்பாபிஷேகத்திற்கு தலைமை தாங்குவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள்.
 
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். உறவினர்கள் சிலர் உங்களின் அதிரடியான வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுவார்கள். மூத்த சகோதரங்கள் பொருளுதவி செய்வார்கள். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். புது பதவிகள், பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் இருந்த சலசலப்புகள் நீங்கும். தோல்விமனப்பான்மை, கூடாப்பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள்.
 
08.01.2016 முதல் ராகு லாப வீட்டில் நுழைவதால் தன்னம்பிக்கையையும், பணவரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறைப்பார். சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக இனி செய்து முடிப்பீர்கள். பொருளாதார வசதியும் பெருகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். அதிக வட்டிக் கடனை அடைத்து முடிப்பீர்கள். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். குலதெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள்.
 
உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பால் சொத்துப் பிரச்சனைகள் தீரும். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்றீர்களே! இனி உற்சாகமாய் கலந்து கொள்வீர்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. தூக்கமில்லாமலும், நிம்மதியில்லாமலும், உடலாலும், மனதாலும் நொந்து போயிருந்த நீங்கள் இனி ஆரோக்யமாகவும் அழகாகவும் இருப்பீர்கள். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் உதவிகள் உண்டு. வீட்டில் சமையலை, குளியலறையை நவீனமாக்குவீர்கள். சிலர் சொந்தமாக புதுத் தொழில் தொடங்குவீர்கள்.
 
ஆனால் கேது 5-ம் வீட்டிற்குள் அமர்வதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு எதிரானவர்களிடம் சென்று சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். மகனின் உயர்கல்வி, உத்யோகத்திற்காக சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். மகளுக்கு திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். உங்களைப் பற்றி வீண் வதந்திகள் வரும்.
 
உள்மனசில் எப்போதும் ஒருவித தயக்கமும், தடுமாற்றமும், சந்தேகமும் இருந்து கொண்டிருக்கும். அவ்வப்போது எதிலும் ஒரு ஆர்வமில்லாமல் போகும். உறவினர்களின் ஒரு சிலர் உதவிக் கேட்டுத் தொந்தரவுத் தருவார்கள். தாய், தாய் மாமா வழியில் சங்கடங்கள் வரும். பூர்வீக சொத்துப் பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. ஆன்மிகவாதிகள், சாதுக்களின் ஆசிப் பெறுவீர்கள். விதிகளுக்கு அப்பாற்பட்டு யாருக்கும் உதவ வேண்டாம்.
 
புத்தாண்டின் தொடக்கம் முதல் 26.02.2016 வரை உங்களின் சப்தமாதிபதி செவ்வாய் ராசிக்குள் நிற்பதாலும் மற்றும் 27.02.2016 முதல் 09.09.2016 வரை செவ்வாய் சனியுடன் சேர்ந்து பலவீனமடைவதாலும் கோபப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் சச்சரவு வரும். கணவன்-மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வரும். மனைவிக்கு மூட்டு வலி, இரத்தக் கொதிப்பு, ஹார்மோன் பிரச்னைகள் வந்துச் செல்லும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் தேக்க நிலை ஏற்படும். திருமண முயற்சிகள் சற்று தாமதமாகி முடியும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.
 
இந்தாண்டு முழுக்க சனி 2-ல் அமர்ந்து ஏழரைச் சனியில் பாதச்சனியாக நடைபெறுவதால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் வரும். சிலர் உங்களை சீண்டிப் பார்ப்பார்கள். உடனே உணர்ச்சிவசப்பட்டு கத்தாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். முன்கோபத்துடன் பேசி சொற் குற்றம், பொருள் குற்றத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களுக்கு சூழ்நிலையை எடுத்துச் சொல்லி புரிய வைக்கப்பாருங்கள்.
 
எதிர்மறை எண்ணங்களுடன் பேசுபவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. பல் வலி, காது வலி வந்துப் போகும். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. கண்ணில் சின்னதாக ஒரு தூசி விழுந்தாலும் உடனே மருத்துவரை ஆலோசிப்பது நல்லது. நீங்களாகவே எதையும் செய்துக் செய்துக் கொண்டிருக்க வேண்டாம். சிலர் கண்ணை பரிசோதித்து மூக்குக் கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை வரும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். தாயாருடன் மோதல்கள் வரும். அவரின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும்.
 
புதிதாக முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். பெரிய வாய்ப்புகளும் வரும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்புக் கூடும். வர்த்தக சங்கத்தில் பதவி கிடைக்கும். சில்லரை வியாபாரத்திலிருந்து சிலர் மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள்.  பாதச் சனி தொடர்வதால் வேலையாட்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். பொறுப்பான, அமைதியான வேலையாள் நமக்கு அமையவில்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் நற்பெயரை சம்பாதிப்பீர்கள். முடிந்தவரை புதிய பங்குதாரரை சேர்க்கும் போது வழக்கறிஞரை ஆலோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். துரித உணவு, கம்பியூட்டர் உதிரி பாகங்கள், ஆடை வடிவமைப்பு மூலம் ஆதாயமடைவீர்கள். பிரபலமான தெருவிற்கோ அல்லது இடத்திற்கோ உங்கள் கடையை மாற்ற முயற்சி செய்வீர்கள்.
 
உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டி வரும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். நன்றி மறந்த சக ஊழியர்களை நினைத்து கொஞ்சம் ஆதங்கப்படுவீர்கள். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். காணாமல் போக வாய்ப்பிருக்கிறது.
 
பல முக்கிய வேலைகளை மேலதிகாரி உங்களை நம்பி ஒப்படைப்பார். அவ்வப்போது இடமாற்றம் வருமோ என்ற ஒரு அச்சம் இருக்கும். வருடத்தின் பிற்பகுதியில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்தடன் வேலைக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. நேரடி மூத்த அதிகாரி தொந்தரவு தருவார். ஆனால் மேல்மட்டத்திலிருக்கும் மூத்த அதிகாரி உங்களுக்கு ஆதரவாக பேசுவார்.
 
கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்யோகம் அமையும். காதல் விவகாரத்தில் தெளிவு பிறக்கும். சிலர் உயர்கல்விக்காக அயல்நாடு செல்வீர்கள். எதிர்பார்த்தபடி நல்ல வரனும் அமைந்து திருமணம் சிறப்பாக முடியும். உங்களிடம் அன்பாகப் பேசி சிலர் உங்களை பாதை மாற்றக் கூடும். கவனம் தேவை.
 
மாணவ-மாணவிகளே! போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. சின்ன சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்வீர்கள். வகுப்பறையில் கடைசி வரிசையில் உட்கார வேண்டாம். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் போராடி சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
 
கலைத்துறையினரே! உங்களின் கற்பனை விரியும். சக கலைஞர்களை மதிப்பீர்கள். புகழடைவீர்கள். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.
 
அரசியல்வாதிகளே! மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி சாதிப்பீர்கள். சகாக்களுடன் உரிமையாகப் பேசி கோஷ்டிப் பூசலை சரி செய்வீர்கள். கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும்.
 
விவசாயிகளே! எலிகளை அழிக்கும் பாம்புகளை அடிக்க வேண்டாம். பூச்சித் தொல்லை குறையும். கரும்பு, சவுக்கு, தேக்கு, கொள்ளு வகைகளால் ஆதாயமடைவீர்கள். கிணறை மேலும் ஆழப்படுத்துவீர்கள். நீர் சுரக்கும்.
 
ஆகமொத்தம் இந்த 2016ம் ஆண்டு அவ்வப்போது உங்களை அலைக்கழித்தாலும் விடாமுயற்சியால் இலக்கை எட்டிப் பிடிக்க வைக்கும்.
 
பரிகாரம்:
 
காரைக்கால் அருகிலுள்ள அம்பகரத்தூர் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீஅஷ்டபுஜக் காளியை அஷ்டமித் திதி நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்றப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil