Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2014 குருப் பெயர்ச்சி பலன்கள் - கும்பம்!

2014 குருப் பெயர்ச்சி பலன்கள் - கும்பம்!
, வெள்ளி, 13 ஜூன் 2014 (15:10 IST)
ஓசைப்படாமல் பூக்கள் மலர்வதைப் போல, ஆரவாரம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு உதவுவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து உங்களின் வருங்காலத் திட்டங்களை நிறைவேற்றியதுடன், குடும்ப வருமானத்தையும் ஓரளவு உயர்த்திய குருபகவான் 13.06.2014 முதல் 04.07.2015 வரை ராசிக்கு 6-ம் வீட்டில் மறைகிறார். 
 
சகட குருவாச்சே! சங்கடங்களையும், எதிர்ப்புகளையும் தருவாரே! என்று கலங்காதீர்கள். உங்கள் யோகாதிபதிகளின் சாரங்களில் செல்வதால் ஒரளவு நல்லதே நடக்கும். வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதை செய்து முன்னேறப் பாருங்கள். உங்களிடம் பழகுபவர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். என்றாலும் சில நேரங்களில் ஏமாற்றங்களை உணருவீர்கள். 
 
எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். வீண் சந்தேகத்தாலும், ஈகோப் பிரச்னையாலும் பிரிவுகள் வரக்கூடும். எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாம்பத்யம் கசக்கும். சிலர் பூர்வீக சொத்தை விற்று விட்டு நகரத்தை ஒட்டியுள்ள புறநகர் பகுதியில் குடியேறுவீர்கள். தவணை முறையில் பணம் செலுத்தி புது வாகனம் வாங்குவீர்கள். தாழ்வுமனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள், சலசலப்புகள் உண்டாகும். 
 
வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். நெடுநாட்களாக நெருங்கிப் பழகிய நண்பர்கள் கூட நீங்கள் மாறி விட்டதாக குறைபட்டுக் கொள்வார்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட அவமானங்கள், இழப்புகள், ஏமாற்றங்களை இவற்றையெல்லாம் நினைத்து ஆதங்கப்படுவீர்கள். சமூகத்தின் மீதும் சின்ன சின்ன கோபமெல்லாம் வந்து நீங்கும். சிலர் உங்களை தவறானப் போக்கிற்கு தூண்டுவார்கள். உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். எனவே மாற்றுவழியை யோசிப்பது நல்லது. 
 
சிலர் உங்களை பார்த்தால் புகழ்ந்து பேசுவதும், நீங்கள் இல்லாத போது உங்களை விமர்சிக்கவும் செய்வார்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். எல்லா இடங்களிலும் நான் தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டுமா என்றெல்லாம் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள். மனிதர்களின் இரட்டை வேடத்தை நினைத்து கோபப்படுவீர்கள். நீங்கள் சிரித்தால் உலகமும் சிரிக்கும், நீங்கள் கோபப்பட்டால் உலகமும் கோபப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும்.  
 

குருபகவான் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு. அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சாமர்த்தியமாகப் பேசி காய் நகர்த்துவீர்கள். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் புது வேலைக் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். 
 
கடினமான வேலைகளையும் எளிதாக முடிக்கும் சக்தி கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். குரு 12-ம் வீட்டை பார்ப்பதால் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சுபச் செலவுகளும் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.   
 
குருபகவானின் சஞ்சாரம்: 
 
13.6.2014 முதல் 28.6.2014 வரை உங்களின் தனாதிபதியும்-லாபாதிபதியுமான குருபகவான் தன் சாரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் செல்வதால் கடனாக கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வீட்டை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் நல்லது நடக்கும். மழலை பாக்யம் கிடைக்கும். புது பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். என்றாலும் செலவுகளும், வேலைச்சுமையும் இருந்துக் கொண்டேயிருக்கும். மூத்த சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.  
 
29.6.2014 முதல் 27.8.2014 வரை உங்களின் ராசிநாதனும்-விரையாதிபதியுமான சனி பகவானின் பூசம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் திடீர் செல்வாக்கு, யோகம், பணவரவு உண்டாகும். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வேற்றுமதத்தவர்கள், மொழியினர்கள், மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். 
 
28.8.2014 முதல் 02.12.2014 மற்றும் 22.12.2014 முதல் 4.7.2015 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் செல்வதால் பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். மகளின் பிடிவாத குணம் மாறும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாகும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.  
 
3.12.2014 முதல் 21.12.2014 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 7-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் செல்வதால் செல்வாக்குக் கூடும். பணவரவு உண்டு. வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். 
 

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 
 
22.12.2014 முதல் 17.4.2015 வரை குருபகவான் ஆயில்யம் நட்சத்திரத்திலும் 17.12.2014 முதல் 21.12.2014 வரை மகம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் திடீர் பயணங்களும், செலவுகளும் துரத்தும். தர்மசங்கமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். பால்ய நண்பர்களுடன் மோதல்கள் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பழைய பிரச்னைகள் மீண்டும் வந்துவிடுமோ என்ற பயம் வந்துப் போகும். படபடப்பு, நெஞ்சு எரிச்சல், இன்பெக்ஷன் வரக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். இடையிடையே பணவரவு உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும்.     
 
வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். அவர்களிடம் வேலை வாங்குவதற்குள் அவர்களை எதிர்பார்க்காமல் நாமே அந்த வேலையை செய்துவிடாலாம் என்று முடிவெடுப்பீர்கள். தொழில் போட்டி அதிகமாகும். வாடிக்கையாளர்களை கடிந்தக் கொள்ளாதீர்கள். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீர்கள். கடை வாடகை அதிகமாகிக் கொண்டேப் போகிறதே கடன் ஏதாவது வாங்கி சொந்த இடம் பார்க்கலாமே என்ற முடிவுக்கு வருவீர்கள். லோன் கிடைக்கும். சிமெண்ட், கணிணி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், எண்டர் பிரைசஸ் வகைகளால் லாபமடைவீர்கள். 
 
உத்தியோகத்தில் என்னதான் உண்மையாக உழைத்தாலும் எந்த பலனும் இல்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உண்மையாக இருப்பது மட்டும் போதாது உயரதிகாரிகளுக்கு தகுதாற்போலும் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். சக ஊழியர்களின் விடுப்பால் வேலைச்சுமை அதிகமாகும். வேறு சிலர் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகி விட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது. உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் கொஞ்சம் இழுபறி நிலை நீடிக்கும். 
 
கன்னிப் பெண்களே! காதல் கசந்து இனிக்கும். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். பழைய நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த கருத்து மோதல் நீங்கும். வெளிமாநிலத்தில் வேலைக் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ற வாழ்க்கைத் துணை அமையும்.
 
மாணவ-மாணவிகளே! யோகா, தியானம் செய்து நினைவாற்றலை அதிகப்படுத்தப்பாருங்கள். உயர்கல்வியில் விளையாட்டுத்தனம் வேண்டாம். நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுக்கு முழு நேரம் ஒதுக்கி தயார்படுத்திக் கொள்ளுங்கள். வகுப்பறையில் கேள்வி கேட்க தயக்கம் வேண்டாம். 
 
கலைத்துறையினரே! மறைமுக போட்டிகள், விமர்சனங்கள் அதிகரிக்கும். வர வேண்டிய சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள். 
 
இந்த குரு மாற்றம் செலவுகளையும், அலைச்சல்களையும் ஒரளவு வெற்றியையும் தரும். 
 
பரிகாரம்
 
விராலிமலையில் வீற்றிருக்கும் ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நாளில் வணங்குங்கள். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுங்கள். 

Share this Story:

Follow Webdunia tamil