Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சனிப் பெயர்ச்சி நட்சத்திரப் பலன்-பகுதி 3

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்:

சனிப் பெயர்ச்சி நட்சத்திரப் பலன்-பகுதி 3
செப்டம்பர் 26ஆம் தேதி, பிற்பகல் 3.27 மணிக்கு தற்போது சிம்மத்தில் உள்ள சனி பகவான், கன்னி ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் நட்சத்திர வாரியாக கிடைக்கும் பலன்கள் குறித்து ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் வழங்கியுள்ளார்.

சுவாதி: இந்த சனிப்பெயர்ச்சியால் இவர்களுக்கு ஏழரைச் சனி துவங்கினாலும், அனைத்து வகையிலும் ஏற்றம் இருக்கும். துலாம் ராசிக்கு சனி யோகவான் ஆவார். எனவே, நல்ல பலன்களே ஏற்படும். குறிப்பாக உடல் நலம் சீராகும். மனதில் இருந்த விரக்தி, வெறுப்புணர்வு விலகும். எதிலும் உற்சாகமான நிலை காணப்படும். தேவையற்ற நட்புகளை சனி விலக்குவார். அதே சமயம் புதிதாக நண்பர்களும் உருவாகுவர். நல்லவர்களுடன் பழகும் வாய்ப்பு உருவாகும்.

பரிகாரம்: காவல் தெய்வங்களை வணங்குவதன் மூலம் நல்ல பலன்களை அதிகரித்துக் கொள்ளலாம். குறிப்பாக, கருப்பு, முனீஸ்வர், அய்யனார் வழிபாடு மேற்கொள்வதுடன், புனித நதிகளில் நீராடுவதும் நல்லது.

விசாகம்: இந்த நட்சத்திரத்தின் முதல் 3 பாதங்கள் துலாம் ராசியிலும், 4ஆம் பாதம் விருச்சிக ராசியிலும் வருகிறது. சொல்லிக் கொள்ளும் அளவிலான நல்ல மாற்றத்தை சனிப்பெயர்ச்சி வழங்கும். 10, 20 ஆண்டுகள் நீடித்த பிரச்சனை கூட இனிமேல் தீரும். குடும்பத்தில் அமைதி நிலவும். கௌரவ விருதுகள், பரிசு, பாராட்டுகள் கிடைக்கவும் வாய்ப்புண்டு. எனினும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட சில நோய்த் தாக்குதல் ஏற்படலாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நலம். கொழுப்பு சத்துள்ள உணவுகளுக்கும் தடை போட வேண்டும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு உருவாகும். கல்வி, உத்தியோகம் காரணமாக பிள்ளைகள் இவர்களை பிரிய நேரிடலாம். விலகிச் சென்ற உறவினர்கள் நெருங்கி வருவார்கள்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் முதல்தரமான ராஜயோகத்தை அனுபவிக்கலாம்.

அனுஷம்: சனிப்பெயர்ச்சியால் மே 2010 முதல் யோகமான பலன்கள் உருவாகும். திருமணத்தடை நீங்குவதுடன், குழந்தை பாக்கியமும் கிடைக்கும். பிள்ளைகள் பாசமாக இருப்பர். எனினும் ஏப்ரல் 2010 வரை சிறு சிறு விபத்துகள், உடல்நலக் குறைவு ஏற்படும் என்பதால் கவனம் தேவை. மே 2010 முதல் வாகனம், சொத்து சேர்க்கைக்கு வழி பிறக்கும். உடல் நலம் சீராகும். மருத்துவச் செலவு குறையும். பெற்றோரிடம் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாட்டின் மூலம் அனைத்து நல்ல பலன்களையும் பெறலாம். எப்போதும் செந்தூரம் இட்டுக் கொள்வது நல்லது.

கேட்டை: இந்த சனிப்பெயர்ச்சியால் இவர்கள் முற்றிலும் விடுதலை பெற்றது போல் உணர்வார்கள். எப்போதும் தொலைநோக்குப் பார்வையுடன் இருக்கும் நீங்கள் இனி, மேலும் வளர்ச்சி பெறுவீர்கள். வி.ஐ.பி.க்கள் நட்பு கிடைக்கும். காசு, பணம் சேரும். ஒரு சிலருக்கு தங்கம் வாங்கும் யோகமும் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். அரசாங்கப் பதவி கிடைக்கலாம். அரசியல் தலைவர்களுடன் தொடர்பு ஏற்படும். எனவே, கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு அனைத்து வகையிலும் ஏற்றம் தரும் சனிப்பெயர்ச்சியாக இது இருக்கப் போகிறது.

பரிகாரம்: திருப்பதி வெங்கடாஜபதியை வணங்குவது நல்லது.

மூலம்: இந்த சனிப்பெயர்ச்சியால் முன்னேற்றம் ஏற்படும். தந்தை வழி உறவுகள் மேம்படும். தந்தையுடன் இருந்து வந்த பிணக்குகள் தீரும். தந்தையின் உடல்நலக் குறைபாடுகள் விலகும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருந்ததே... இனி அந்த நிலை மாறும். மனநிலை அமைதியடையும். சொந்த பந்தங்களால், நெருங்கிய நண்பர்களால் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் நிறைய உள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். எனினும், முக்கிய தருணங்களில் வெற்றி தொடரும்.

பரிகாரம்: குலதெய்வ வழிபாட்டின் மூலம் இடர்பாடுகளை குறைத்துக் கொள்ளலாம். ராகவேந்தர் வழிபாடும் பலனளிக்கும்.

பூராடம்: இந்த சனிப்பெயர்ச்சியால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். மனதளவில் விரக்தியில் இருந்தவர்கள் சகஜ நிலைக்கு திரும்புவர். பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதிய வாகனத்தை வாங்கும் யோகமும் சிலருக்கு கிடக்கும். பெரிய பொறுப்பு, பதவிகள் தேடி வரும். அனைத்து விஷயங்களிலும் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும். சுருக்கமாகச் சொன்னால் இந்த சனிப் பெயர்ச்சியால் இவர்களுக்கு அனைத்து வகையிலும் நல்ல பலன்கள் கிடைக்கும். மகான்கள், சித்தர்கள், வி.ஐ.பி.க்கள் தொடர்பு கிடைக்கும். திருமண முயற்சிகள் வெற்றி பெறும். பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். மூத்த அதிகாரிகளிடம் மோதல் போக்கு கூடாது. காசோலையில் கையெழுத்திடும் போது கவனமாக இருக்க வேண்டும். வங்கிப் பணியாளர்கள் கவனச் சிதறல் காரணமாக பிரச்சனையில் சிக்கிக் கொள்ளலாம்... கவனம் தேவை.

பரிகாரம்: லட்சுமி தேவியை வெள்ளியன்று வணங்குவதும், அஷ்டலட்சுமி படங்களை வீட்டில் வைப்பதன் மூலமும் வெற்றி வாய்ப்புகள் கூடி வரும்.

உத்திராடம்: தனுசு, மகரம் ஆகிய 2 ராசிகளுக்கும் இந்த சனிப் பெயர்ச்சி துவக்கத்தில் சுமாராகவே இருக்கும். குறிப்பாக 2010 செப்டம்பர் வரை சிறு சிறு பிரச்சனைகள் வரும். என்றாலும் முன்பை விடப் பரவாயில்லை என்ற நிலை காணப்படும். தோல் வியாதிகள் வரலாம். வாகன விபத்து, இடறி விழுதல், ஜாமீன் கையெழுத்திட்டு சிக்கிக் கொள்ளுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். தம்பதிகளுக்குள் கருத்து மோதல்கள் ஏற்படும். எனினும் 2010 அக்டோபர் முதல் இவர்களுக்கு முதல் தரமான யோகப் பலன்கள் கிடைக்கும்.

பரிகாரம்: திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து ஈசனை வணங்குவதன் மூலம் நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

Share this Story:

Follow Webdunia tamil