Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சனிப் பெயர்ச்சி நட்சத்திரப் பலன்கள்-பகுதி 2

ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன்:

சனிப் பெயர்ச்சி நட்சத்திரப் பலன்கள்-பகுதி 2
செப்டம்பர் 26ஆம் தேதி, பிற்பகல் 3.27 மணிக்கு தற்போது சிம்மத்தில் உள்ள சனி பகவான், கன்னி ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் நட்சத்திர வாரியாக கிடைக்கும் பலன்கள் குறித்து ஜோதிட ரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் வழங்கியுள்ளார்.

பூசம்: சனிப்பெயர்ச்சியால் இவர்களுக்கு முதல் தரமான ராஜயோகம் கிடைக்கும். இதுவரை கடும் அவஸ்தைப்பட்ட பூசம் நட்சத்திரக்காரர்கள், கன்னிக்கு வரும் சனியால் பல நல்ல பலன்களை அனுபவிக்கப் போகின்றனர். திருமணத் தடை நீங்குவதுடன், குழந்தை பாக்கியமும் கிடைக்கும். சொத்து சேர்க்கை, புதிய வேலைவாய்ப்பு, நண்பர்கள் வழியில் உதவி, கடன் பைசல் செய்யும் வாய்ப்பு ஆகியவற்றை சனி பகவான் ஏற்படுத்தித் தருவார். மனதாலும், உடலாலும் பாதிக்கப்பட்ட நிலை மாறி முகத்தில் தெளிவு உண்டாகும்.

பரிகாரம்: அம்பாள் வழிபாடு, குறிப்பாக மூகாம்பிகையை வழிபடுவதன் மூலம் அனைத்து வகையிலும் ஏற்றம் பெறலாம்.

ஆயில்யம்: இதுவரை மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்த இவர்களுக்கு இனி ஏற்றம் கிடைக்கும். நல்லது செய்யப் போய் அவப்பெயர் ஏற்பட்டதே அந்தநிலை மாறும். காசு, பணத்தை இழந்து தவியாய் தவித்தீர்களே, இனி உங்களுக்கு வசந்த காலம் பிறக்கும். சுற்றத்தாரின் பேச்சைக் கேட்டு அவசர கதியில் விவாகரத்து பெற்ற தம்பதிகள் கூட மீண்டும் இணைந்து வாழும் நிலை ஏற்படும். குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

பரிகாரம்: நாகதேவதைகளான கருமாரியம்மன் உள்ளிட்ட தெய்வங்களை வழிபடுவது நல்ல பலனளிக்கும்.

மகம்: இந்த சனிப்பெயர்ச்சி இவர்களுக்கு மகத்தான மாற்றங்களை வழங்கப் போகிறது. ஏறக்குறைய வீட்டுக்காவலில் உள்ளது போல் முடக்கப்பட்ட இவர்கள், இனி குகையில் இருந்து புறப்படும் சிங்கமாக மாறப் போகிறார்கள். கடந்த காலத்தில் உறவினர் பகை கடுமையாக இருந்ததே. படுத்த படுக்கையாக சிலர் இருந்தீர்களே. தவறு செய்யாமலேயே தண்டனைக்கு ஆளானீர்களே. ஜென்மப் பகையாளிகள் போல் தம்பதியரால் கருதப்பட்டீர்களே. இனி அந்த நிலை எல்லாம் மாறும். ஆரோக்கியம், படிப்பு, திருமணம், பொருளாதாரம் என அனைத்து வகையிலும் இனி ஏற்றம் இருக்கும்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வணங்குவதன் மூலம் நற்பலன்களை இவர்கள் அதிகரித்துக் கொள்ளலாம்.

பூரம்: பணம், காசு, பதவி என அனைத்தும் கிடைத்தாலும் அதனை அனுபவிக்க முடியாத நிலை இதுவரை இருந்து வந்தது. இந்த சனிப்பெயர்ச்சி அதனை மாற்றும் விதமாக அமைவதுடன், அனைத்து வகையிலும் வெற்றி வாய்ப்பை அள்ளித் தரும். குறிப்பாக, மறுபிறப்பு எடுத்தது போன்ற புத்துணர்ச்சி இவர்களின் மனதில் ஏற்படும். சொத்து சேர்க்கைக்கும் சிலருக்கு வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். புது வீடு வாங்கும் அமைப்பும் உருவாகும்.

பரிகாரம்: காஞ்சி காமாட்சியம்மனை வணங்குவதன் மூலமாக மேலும் நல்ல பலன்களைப் பெறலாம்.

உத்திரம்: இந்த சனிப்பெயர்ச்சிக்கு பிறகு நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, 2010 அக்டோபர் வரை உத்திரம் நட்சத்திரத்திலேயே சனி சஞ்சாரம் செய்வதால் பெரிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். புதிய முதலீடுகள் கூடாது. நீண்ட காலம் பழகியவர்களே எதிரிகளாக மாறும் நிலை ஏற்படக் கூடும். உடல்நிலையில் கவனம் தேவை. சர்க்கரை நோய் வரலாம். தீய பழக்க வழக்கங்கள் இருந்தால் அதனை கைவிடுவது நல்லது. இல்லாவிட்டால் அவஸ்தைப்பட நேரிடும். சிம்மம், கன்னி என 2 ராசிக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். தசா புக்தி சரியில்லாமல் இருந்தால் பெரிய விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. 2010 நவம்பர் முதல் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

பரிகாரம்: சதுர்த்தி திதியில் விநாயகரை வழிபடுவது. அருகம்புல் மாலை அணிவித்து விநாயகரை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். அசைவ உணவுகளையும் தவிர்க்கலாம்.

அஸ்தம்: சந்திரனின் ஆதிக்கத்தில் இருப்பதால் உங்களுக்கு தற்போது நல்ல பலன் கிடைத்து வருகிறது. ஆனால் 2010 நவம்பர் முதல் 2011 செப்டம்பர் வரை இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்தக் காலத்தில் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். சிலருக்கு கை, கால் முறிவு ஏற்படலாம். தம்பதிகள் பிரியும் அளவுக்கு வாக்குவாதம் வரலாம். வியாபாரத்தில் முதலீடு செய்வது உரிய பலனளிக்காமல் போகும். பிள்ளைகளால் பிரச்சனை, கௌரவக் குறைவு ஏற்படும். எந்த ஒரு விடயத்தையும் ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவு செய்வதே சிறந்தது.

பரிகாரம்: குருவாயூரப்பன் வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் இன்னல்களை தவிர்க்கலாம். குருவாயூர் செல்ல முடியாதவர்கள் அருகில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு சென்று அங்குள்ள குருவாயூரப்பனை வணங்கலாம்.

சித்திரை: கன்னி, துலாம் ஆகிய 2 ராசிகளிலும் சித்திரை நட்சத்திரம் வருகிறது. கடந்த காலத்தில் இவர்கள் அனைவருமே நிறைய சிரமங்களை அனுபவித்தனர். இந்த சனிப்பெயர்ச்சி நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக சகோதரர்களுக்கு இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வழக்குகள் நல்ல முறையில் முடிவடையும். நல்ல வேலை கிடைப்பதுடன், சம்பளப் பிரச்சனையும் நிவர்த்தியாகும். கடனுதவி பெற்றாவது வீடு வாங்கும் யோகத்தை சனி வழங்குவார். எனினும், 2011 அக்டோபர், நவம்பர் மாதங்களில் சித்திரை நட்சத்திரத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்வதால், இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகன் வழிபாடு மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil