Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குரு பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்

குரு பெயர்ச்சி பலன்கள் - விருச்சிகம்
, வெள்ளி, 3 ஜூலை 2015 (14:41 IST)
போராடி முதலிடத்தைப் பிடிப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாவது வீட்டில் அமர்ந்திருந்து கடந்த ஓராண்டு காலமாக 9-ம் வீட்டில் அமர்ந்திருந்த குரு ஏழரைச் சனியால் ஏற்பட்ட பாதிப்புகளை ஓரளவு குறைத்ததுடன் சின்ன சின்ன ஆசைகளையும் நிறைவேற்றி வைத்த குருபகவான் 05.07.2015 முதல் 01.08.2016 வரை உங்கள்  ராசிக்கு 10-ம் வீட்டிற்குள் நின்று பலன் தரப்போகிறார். பத்தாம் இடமென்றால் பதவி ஸ்தானமாச்சே! உத்யோகம், பதவி, கௌரவத்திற்கு பங்கம் வருமோ என்றெல்லாம் பதட்டப்படாதீர்கள். பிரச்னைகளை சமாளிக்கும் சக்தி உண்டாகும். வி.ஐ.பிகள் ஆதரவாக இருப்பார்கள். வெளிநாட்டில் சிலருக்கு வேலைக் கிடைக்கும். நல்ல சந்தர்ப்ப, சூழ்நிலைகளையெல்லாம் சரியாக பயன்படுத்தி முன்னேறப்பாருங்கள். உங்களது திறமைகள் மீது நீங்கள் நம்பிக்கை வைப்பது நல்லது.

என்றாலும் அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, வாக்குறுதிகளோ தர வேண்டாம். குடும்பத்தில் சின்ன சின்ன சலசலப்புகள் வரும். மனிதர்களின் இரட்டை வேடத்தை நினைத்து கோபப்படுவீர்கள். சமூகத்தின் மீதும் சின்ன சின்ன கோபமெல்லாம் வந்து நீங்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும், விமர்சித்தாலும் கலங்கிக் கொண்டிருக்காதீர்கள். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். எல்லா இடங்களிலும் நான் தான் விட்டுக் கொடுத்துப் போக வேண்டுமா என்றெல்லாம் சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவீர்கள். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டி வரும்.

இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற டென்ஷன் இருந்துக் கொண்டேயிருக்கும். உதவுவார்கள் என்று நீங்கள் நம்பிக் கொண்டிருந்தவர்கள் உங்களை உதரித்தல்ல வாய்ப்பிருக்கிறது. எனவே மாற்று ஏற்பாடுகளை கவனிப்பது நல்லது. கட்டிக் காப்பாற்றிய கௌரவத்தை இழந்துவிடுவோமோ என்ற ஒரு கவலைகள் வந்து நீங்கும். ஒரே சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். குடும்பத்துடன் வெளி ஊருக்கு செல்லும் முன் சமையலறையில் கேஸ் இணைப்பை சரி பார்த்து செல்லுங்கள். நகை, பணம், முக்கிய பத்திரங்களை வங்கி லாக்கரில் வைப்பது நல்லது. களவுப் போக வாய்ப்பிருக்கிறது. பொய்யான விளம்பரத்தை கண்டு ஏமாறாதீர்கள். ரிசர்வு வங்கியின் அனுமதிப் பெறாத ஃபைனான்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டாம். 
 
உங்கள் ராசிக்கு 2-ம் வீடான வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சாணக்கியத்தனமாகப் பேசி சாதிப்பீர்கள். குடும்பத்திலும், கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பார்வைக் கோளாறு, பல் வலி சரியாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். புதிதாக வண்டி வாங்குவீர்கள். 
 
குருபகவான் தனது 7-ம் பார்வையால் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் சீராகும். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். அம்மான், அத்தை வகையில் மதிப்புக் கூடும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். அயல்நாட்டிலிருப்பவர்களால் அனுகூலம் உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். காற்றோட்டமில்லாத, தண்ணீர் வசதியில்லாத வீட்டிற்கு மாறுவீர்கள்.
 
உங்களின் 6-ம் வீட்டை குரு தனது 9-ம் பார்வையால் பார்ப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். அதிக வட்டிக் கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். சில வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அக்கம்-வீட்டாருடன் அணுசரனையாக சூழ்நிலை உருவாகும். கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.  

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
05.07.2015 முதல் 06.09.2015 வரை குருபகவான் கேதுவின் மகம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். புது வாய்ப்புகள் வரும். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள், திருப்பித் தருவார்கள். தூரத்து சொந்தங்கள் மற்றும் பால்ய சிநேகிதர்கள் உதவுவார்கள். வாழ்வின் முன்னேற்றத்திற்கு காரணமானவர்களைச் சந்திப்பீர்கள். வீண்பழி, விபத்து, இழப்பு, உடல் நலக்குறைகள் வந்து போகும்.   
 
07.09.2015 முதல் 16.11.2015 வரை மற்றும் 20.05.2016 முதல் 09.07.2016 வரை உங்கள் விரையாதிபதியும்-சப்தமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் பயணங்கள், செலவினங்கள் உண்டு. பழமை வாய்ந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மனைவிவழியில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். அவ்வப்போது மனைவியின் ஆரோக்யமும் பாதிக்கும். கடந்த கால சுகமான அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். 
 
17.11.2015 முதல் 20.12.2015 வரை மற்றும் 10.07.2016 முதல் 01.08.2016 வரை குருபகவான் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் செல்வதால் உங்களின் மதிப்பு, மரியாதைக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். புது வேலைக் கிடைக்கும். கௌரவப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். என்றாலும் வேலைச்சுமையும் இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 
 
21.12.2015 முதல் 19.01.2016 வரை உத்திரம் 2ம் பாதம் கன்னி ராசியில் செல்வதால் மாறுபட்ட யோசனைகள் பிறக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். மாதக் கணக்கில் தடைப்பட்டு வந்த காரியங்களெல்லாம் முடிவடையும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.   

குருபகவானின் வக்ர கால பயணம்: 
20.01.2016 முதல் 06.02.2016 வரை குருபகவான் உத்திரம் நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் வக்ர கதியில் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பால்ய நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். உங்களிடம் சிலர் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். நரம்புச் சுளுக்கு, கணுக்கால் வலி வந்துப் போகும். 
 
07.02.2016 முதல் 07.03.2016 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திரம் 1-ம் பாதம் சிம்ம ராசியில் குரு வக்ரமடைவதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைகளும், அலைச்சலும் இருக்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். பெற்றோருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். அடிவயிற்றில் வலி, வேனல் கட்டி, தேமல் வந்துப் போகும். 
 
08.03.2016 முதல் 19.05.2016 வரை பூரம் நட்சத்திரத்தில் குரு வக்ர கதியில் செல்வதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். மனைவிக்கு புது வேலைக் கிடைக்கும். அவரின் ஆதரவுப் பெருகும். மனைவிவழி சொத்துகளும் கைக்கு வரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள். கனவுத் தொல்லை குறையும். ஆழ்ந்த உறக்கம் வரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.  
 
வியாபாரிகளே! வழக்கமான லாபம் உண்டு. போட்டியாளர்களை சமாளிக்க விளம்பர யுக்திகளை கையாளுங்கள். பழைய தவறுகள் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். சந்தை நிலவரங்களையும் அவ்வப்போது அறிந்து கொள்வது நல்லது. சிலரின் தவறான ஆலோசனைகளை ஏற்காதீர்கள். யாருக்கும் கடன் தர வேண்டாம். பழைய பாக்கிகளை போராடி வசூலிக்க வேண்டி வரும். வேலையாட்களால் பிரச்னைகள் வரும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். மின்னணு, மின்சார சாதனங்கள், மளிகை, ஸ்டேஷனரி மற்றும் துணி வகைகளால் லாபமடைவீர்கள். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்திவிடுவது நல்லது. பங்குதாரர்களுடன் பனிப்போர் வெடிக்கும். புதிதாக பங்குதாரர்களை சேர்க்கும் போது சட்டப்படி உரிய ஆவணங்களில் எழுதி பிறகு கையப்பமிட்டு சேர்த்துக் கொள்வது நல்லது. தேவைப்பட்டால் வழக்கறிஞரின் ஆலோசனையையும் ஏற்பது நல்லது. 
 
உத்யோகஸ்தர்களே! கூடுதல் நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டி வரும். உங்களைப் பற்றிய வீண் வதந்திகளை அலுவலகத்தில் பரப்புவார்கள். தலைக்குனிவான சம்பவங்கள் ஒன்றிரண்டு நிகழக்கூடும். எனவே கவனமாக இருங்கள். அலுவலகத்தில் அமைதியை கடைபிடிப்பது நல்லது. சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துகளை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. அலுவலக ரகசியங்களைப் பற்றியோ, மேலதிகாரிகளைப் பற்றியோ வெளியில் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சிலர் சூழ்ச்சிகளாலும், பிரச்னைகளாலும் வேலையை இழக்க நேரிடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த வாய்ப்பிருக்கிறது. மறதி, கவனக் குறைவால் தவறுகள் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள். புது வாய்ப்புகள் வந்தால் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து ஏற்றுக்கொள்வது நல்லது. சக ஊழியர்களால் சில இன்னல்கள் வரத்தான் செய்யும். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். பதவி உயர்விற்காக போராட வேண்டி வரும்.  
 
கன்னிப் பெண்களே! நிஜம் எது, நிழல் எது என தெரியாத காதலில் சிக்கிக் கொள்ள வேண்டாம். படிப்பில் தடை வரக்கூடும். அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுக்காமல் பெற்றோரை கலந்தாலோசிப்பது நல்லது. புதிய நட்பால் சில பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பசியின்மை, ஹார்மோன் கோளாறு வரக்கூடும். உயர்கல்வியில் போராடி வெற்றி பெற வேண்டி வரும்.    
 
மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். விளையாட்டு விளையாட்டு என்றிருக்காமல் படிப்பில் அக்கறை காட்டுங்கள். கெட்ட நண்பர்களை ஒதுக்குங்கள். வகுப்பறையில் முன் வரிசைக்கு அமருங்கள். விடைகளை எழுதி பாருங்கள். வேதியில், உயிரியல் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.    
 
கலைத்துறையினரே! உங்களை பற்றிய, விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கும். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களுடைய படைப்புகளை போராடி வெளியிட நேரிடும். பழைய சம்பளப் பாக்கி கைக்கு வரும்.
 
பரிகாரம்:
திருச்செந்தூர் அருள்மிகு முருகப் பெருமானை கார்த்திகை நட்சத்திரம் நடைபெறும் நாளில் வயது தீபமேற்றி வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil