பல நூற்றாண்டுக் கால மன்னராட்சிகளைத் தொடர்ந்து 200 ஆண்டுக்காலம் நீடித்த வெள்ளையர் ஆட்சியை - காலனி ஆதிக்கத்தை இரு நூற்றாண்டுக் கால சுதந்திரப் போராட்டத்தினால் வென்று விடுதலைப் பெற்று இந்தியர்கள் என்று பெருமையுடன் பறைசாற்ற்றிக்கொண்ட நாம், நமது நாட்டை எவ்வாறு நிர்வகித்துக் கொள்ளப்போகின்றோம் என்பதை வரையறை செய்யும் நமது அரசமைப்பு சாசனத்தை ஏற்றுக்கொண்ட நாள் 1950, ஜனவரி 26.
அடிப்படை உரிமைகள், சமத்துவம், நீதி ஆகியன இந்தியர்களாகிய எங்களுக்கு எவ்வித வேறுபாடும் இன்றி அனைவருக்கும் கிடைத்திடவும், இந்தியர்களாகிய எங்களுக்குள் சகோதரத்துவத்தை உருவாக்கி அதன் மூலம் தனி மனித கண்ணியத்தையும் தேசத்தின் ஒற்றுமையையும் காப்போம் என்ற அற்புதமான கொள்கையின் அடிப்படையில் எமது அரசமைப்பு இருக்கும் என்று உலகிற்கு நம்மை பறைசாற்றிய உன்னத நாளே நமது குடியரசு தினம்.
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நமது நாடு விடுதலைப் பெற்றது. அது மண்ணோடு சேர்த்து மக்களுக்குக் கிடைத்த சுதந்திரம். அடிமை வாழ்வில் இருந்தும், அன்னிய ஆதிக்கத்தில் இருந்தும் நாம் பெற்ற விடுதலை அது. அளப்பரிய தியாகங்களால் கிடைத்த அந்த விடுதலை இந்தியர்கள் என்று ஒருசேர அழைத்துக் கொண்ட நம் அனைவருக்கும் முழுமையாக கிடைத்திட, அந்த சுதந்திர வாழ்வின் பலன் அனைவருக்கும் சென்று சேர்ந்திட, அதை எவ்வித பிசகும் இன்றி உறுதி செய்திட நாமே வகுத்து நமக்கு அளித்துக் கொண்டதுதான் நமது அரசமைப்புச் சட்டம்.
இதைத்தான் நமது அரசமைப்புச் சட்டத்தில் முகவுரையாக (Preamble) வழங்கப்பட்டுள்ளது. அந்த முகவுரை என்ன கூறுகிறது?
“இந்தியாவின் மக்களாகிய நாங்கள், தனியாற்றல் பெற்ற, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக இந்தியாவை அமைத்து, அதன் மூலம் எமது குடிமக்கள் அனைவருக்கும்;
சமூக, பொருளாதார, அரசியல் நீதியையும்;
சிந்தனை, கருத்து, நம்பிக்கை, பற்றுறுதி மற்றும் வழிபாட்டுச் சுதந்திரத்தையும்;
நிலையிலும், வாய்ப்பிலும் சமத்துவத்தையும் உறுதிசெய்து
அதன்மூலம் அவர்களுக்கிடையே
தனி மனித கண்ணியத்தையும், தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பையும் உறுதிசெய்யும் சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம் என்று எமது அரசமைப்பு பேரவையில் 1949 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26 ஆம் நாள் ஏற்று, நிறைவேற்றி, எங்களுக்கு நாங்கள் அளித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
எவ்வளவு உன்னதமான, அர்த்தம் பொதிந்த, ஆழமான உறுதியேற்பு!
நமது அரசமைப்புச் சட்டத்திலுள்ள 395 பிரிவுகளையும் கட்டுப்படுத்தக் கூடிய, வழிகாட்டக் கூடிய நெறியாகவும், இந்தியா எனும் மாபெரும் நாட்டின் உண்மையுணர்வாகவும் இந்த முகவுரை உள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் எந்த ஒரு பிரிவும், காலத்திற்குகேற்பவும், உருவாகும் மாற்றங்களுக்குத் தக்கவாறும், நிருவாக வசதிக்காகவும் திருத்தம் செய்யப்படலாம். ஆனால், முகவுரையில் இடம்பெற்றுள்ள இந்த அடிப்படைகள் நிரந்தரமானவை.
வெள்ளையரிடம் அடிமைப்பட்டு, உரிமையற்றுக் கிடந்த நாம், நமது தலைவர்களின் ஈடிணையற்ற தியாகத்தினால் பெற்ற சுதந்திரத்தைக் கொண்டு எல்லாவித உரிமைகளையும் பெற்று முழுமையான தனி மனித வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டிற்கும், ஒற்றுமையான வாழ்விற்கும் ஒர் அடித்தளம் அமைத்துக் கொண்டுள்ளோம்.
மண்ணின் விடுதலையை முழுமையான தனி மனித, சமூக, பொருளாதார, அரசியல் விடுதலையாக மாற்ற உறுதியேற்று நாம் உருவாக்கிய நமது அரசமைப்புச் சட்டத்தை 57 ஆண்டுகளுக்கு முன் நாம் ஏற்ற நாள் இது.
தொலை நோக்குடன் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் நோக்க்த்தை முழுமையாக நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே, நாம் நமது சுதந்திரப் போராட்டத்தையும், அதன் வெற்றியையும், இந்தியாவின் நிர்மாணத்தையும், நமது எதிர்காலத்தையும் அர்த்தமுள்ளதாக்க முடியும்.
அதற்கு இந்த நன்நாளில் உறுதியேற்போம்.
குடியரசு தின வாழ்த்துகள்!