Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆன்மா - அன்னை

ஆன்மா - அன்னை
, செவ்வாய், 18 ஜனவரி 2011 (16:50 IST)
ஆன்மா இறைவனிடமிருந்து வருகிறது, ஆனால் ஒருபோதும் அவனைவிட்டுப் பிரிவதில்லை, அவனிடம் திரும்பச் செல்கிறது, ஆனால் சிருஷ்டியை விட்டு மறைந்துவிடுவதில்லை.

தனித்தன்மையை ஏற்றுக்கொண்ட, ஆனால் தெய்வத்தன்மையை இழந்துவிடாத, இறைவனே ஆன்மா. ஆன்மாவில் தனித்தன்மை பெற்ற ஜீவனும் இறைவனும் எல்லையில்லாக் காலத்திற்கும் ஒன்றாக உள்ளனர். ஆகவே உன்னுடைய ஆன்மாவை அறிவது என்பது இறைவனுடன் ஐக்கியப்படுவதாகும். ஆகவே ஆன்மா செய்ய வேண்டிய வேலை மனிதனை உண்மையான ஜீவனாக ஆக்குதல் என்று சொல்லலாம்.

தரிசனங்கள், சமயப் பிரிவுகள் எல்லாம் வெவ்வேறு கொள்கைகளை உடையவை. தங்களுடைய கொள்கைகளே சரியானவை என்று நிலைநாட்ட அவை அற்புதமான காரணங்கள் காட்டும்.

என்னுடைய சொந்த அனுபவத்தைப் பற்றித்தான் நான் பேச முடியும்: ஆன்மா தெய்வத்தன்மையுடையது, பரம்பொருளின் ஒரு நித்தியமான பாகம், அதனுடைய தர்மத்தைத் தவிர வேறு எந்த தர்மத்தாலும் அதற்கு வரம்புகட்டவோ தலையிடவோ முடியாது.

இந்த ஆன்மாக்கள் இறைவனால் அவனுடைய வேலையைச் செய்வதற்காக அவனிடமிருந்தே தோற்றுவிக்கப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒரு விசேஷ நோக்கத்துடன், ஒரு விசேஷ வேலைக்காக, ஒரு விசேஷ ஊழுடன் பூமியின் பிறக்கின்றன. அவை ஒவ்வொன்றிற்கும் அதற்கே உரிய, விலக்க முடியாத தர்மம் உண்டு, அது பொதுவிதியாக இருக்க முடியாது. ஆகவே, நித்தியமான சிருஷ்டியில், நம்மால் கற்பனை செய்யக்கூடியவை எல்லாமும் கற்பனை செய்ய முடியாதவையும் கூட இருக்கவே செய்யும்.

ஆன்மா நித்யமானது, எல்லாவற்றையும் தன்னுட்கொண்டது. இந்த திறமையின்மைகள், இயலாமைகளெல்லாம் அது சம்பந்தப்பட்டவரை உண்மையான இருப்புடையவை அல்ல.

ஒருவன் மனிதனுடைய ஆன்மாவுடன் பேசும்போது உடலில், இனவகையில் அல்லது பண்பாட்டில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், எப்போதும் ஒரே ஆன்மாவுடனேதான் பேசுகிறான்.

ஆன்மாவால் இறைவனை நினைக்க முடியாது, ஆனால் உறுதியுடன் அவனை அறியும்.

ஒரு மலர் சூரியனைக் கண்டு மலர்வதைப்போல உன் ஆன்மா இறை ஒளியைக் கண்டு மலரும்.

நான் எனது ஆன்மாவை முன்னேறச் செய்வது எப்படி?

உன்னுடைய ஆன்மா மீது செயல்பட வேண்டுமானால் முதலில் நீ அதை உணர வேண்டும். நீ உன்னுடைய ஆன்மாவை உணரும்போது, நீ உன்னுடைய ஆன்மாவை முன்னேறச் செய்யவில்லை உன்னுடைய ஆன்மாதான் நீ முன்னேற உதவுகிறது என்பதை நீ உணரக்கூடும்.

ஆன்மா என்பது என்ன, அது எந்த வடிவில் நம்முள் இருக்கிறது?

முதலில் ஆன்மா இறைவனிடமிருந்து வந்த ஒரு ஒளிப்பொறியின் வடிவில் இருக்கும்.

பரிணாமத்தின் மூலம் அது தனித்தன்மை பெற்ற ஜீவனாகிறது, அதன்பிறகு அதனால் தான் விரும்பிய வடிவத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

ஆன்மா தன்னை எதுவாக அறிகிறதோ, எதுவாக உள்ளதோ, அதுவாக மனம், உயிர், உடல் ஆகவேண்டும், அதுவாக வாழவேண்டும்.

ஒருவனுடைய ஆன்மா விழித்துவிட்டபின் அதைத் தள்ளிவிடுவது எளிதல்ல, ஆகவே அதன் ஆணைகளுக்குக் கீழ்ப்படிந்துவிடுவதே நல்லது.

உன்னுடைய ஆன்மாவுக்குக் கீழ்ப்படி, அது ஒன்றுதான் உனது வாழ்க்கையை ஆள்வதற்கு உரிமை உடையது.

சைத்திய மையம்: ஒளி பொருந்தியது, அமைதியுடையது, அது மனித ஜீவனை ஆள்வதற்காக உண்டாக்கப்பட்டது.

சைத்திய புருஷன் ஜீவன் முழுவதையும் ஆளும்போது அது தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஆற்றலைப் பெறுகிறது.

சைத்திய ஆற்றல் இயற்கையின் செயல்களை முன்னேறச் செய்வதற்காக அவற்றை ஒழுங்குபடுத்துகிறது.

சைத்திய புருஷன் செல்வாக்குப் பெற்றிருக்கும்போது எல்லாச் செயல்களும் சமநிலை பெறுகின்றன.

சைத்தியச் செல்வாக்கு தூல ஜீவனை இறைவனை நோக்கித் திரும்பும்படி கட்டாயப்படுத்துகிறது.

இந்த வீடு சைத்திய புருஷனின் சின்னமாக நித்தியமான தெய்வீக சாநித்தியத்தின் கோயிலாக இருக்கட்டும்.

சைத்திய மையத்தின் உணர்வில் வாழ், அப்பொழுது உன்னுடைய இச்சா சக்தி இறைவனின் சங்கற்பத்தை மட்டும் வெளிப்படுத்தும், அப்பொழுது உருமாற்றமடைந்த ஜீவனால் இறைவனின் அன்பைப் பெறவும் அதை வெளிப்படுத்தவும் இயலும்.

மனிதனின் மையம் சைத்திய புருஷனே, அது அந்தர்யாமியாகிய இறைவன் உறையும் கோயில். ஒருமைப்படுத்துதல் (Unification) என்றால் ஜீவனின் செயல்களெல்லாம் (மனம், பிராணன், உடலின் செயல்கள்) இறைவனின் சாநித்தியத்தின் இச்சையின் சரியான வெளிப்பாடாக இருக்குமாறு சைத்திய மையத்தைச் சுற்றி ஒழுங்கு செய்தலும் இசைவுபடுத்துதலும் (Harmonisation) என்று பொருள்.

Share this Story:

Follow Webdunia tamil