கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலில், புரட்டாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைகள் வெகு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். வியாழக்கிழமையான நாளை புரட்டாசி மாதம் பிறக்கிறது. எனவே புரட்டாசி மாத பூஜைக்காக புதன்கிழமை மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. வரும் 21ம் தேதி வரை கோயிலில் பூஜைகள் நடைபெறும்.இன்று மாலை 5.30 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ்வரரு முன்னிலையில் மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி, கோயில் நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துவார். வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது.நாளை அதிகாலை முதல் வரும் 21ம் தேதி வரை கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்சிக்கால பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள், நெய்யபிஷேம் மற்றும் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். பூஜைகள் நிறைவடைந்ததும் 21ஆம் தேதி இரவு கோயில் நடை சாத்தப்படும்.