சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புகழ்பெற்ற அறுபத்து மூவர் திருவிழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்படுகிறார்கள்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இதையொட்டி, இன்று கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடைபெறுகிறது. நாளை அறுபத்து மூன்று நாயன்மார்களும் ஊர்வலமாக வரும் காட்சியை காண ஆயிரக்கணக்கான மக்கள் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் குவிவார்கள். இதையொட்டி மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்படுகிறது.
அறுபத்து மூன்று நாயன்மார்களும் வீதி உலா வரும்போது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். இலவசமாக நிறைய பேர் ஸ்டால்கள் அமைத்து மோர் கொடுப்பார்கள். இதில் குளறுபடி ஏற்படக்கூடாது என்பதற்காக அன்னதானம் வழங்குவோரும், மோர் வழங்குவோரும் முன்கூட்டியே முறைப்படி காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி மயிலாப்பூருக்கு மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் விசேஷ பேருந்துகள் இயக்கப்படுகிறது. அறுபத்து மூவர் திருவிழாவுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை இணை ஆணையர் துரைராஜ் மேற்பார்வையில், துணை ஆணையர் மவுரியா தலைமையில் ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர்.