ஜெ. மருத்துவமனையில்: அரசை வழிநடத்தும் 6 பேர் அணி!
ஜெ. மருத்துவமனையில்: அரசை வழிநடத்தும் 6 பேர் அணி!
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 22-ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்ட அவர் இன்னமும் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 14 நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் நிலையில் அரசை வழி நடத்துவது யார் என்ற கேள்விகள் எழுந்து வருகின்றனர். சிலர் முதல்வர் ஜெயலலிதா குணமாகி வரும் வரை துணை முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசை யார் வழி நடத்துகிறார்கள் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், மற்ற மாநிலங்களை போல தமிழகத்தில் அதிகாரம் பரவலாக்கப்படவில்லை. தமிழகத்தில் முதல்வர் அலுவலகத்திலேயா அனைத்து அதிகாரமும் குவிந்துள்ளது. அவர்கள் தான் அனைத்து முக்கிய நடவடிக்கைகளையும் கண்காணிப்பது வழக்கம்.
முதல்வர் அலுவலகத்தில் மொத்தம் 4 தனி செயலாளர்கள் உள்ளனர். இவர்கள் மொத்தமுள்ள 54 துறைகளின் முக்கிய பணிகளையும் மேற்பார்வையிடுகிறார்கள். பின்னர் இந்த 54 துறைகள் பற்றி இந்த 4 தனிச்செயலர்கள், மாநில தலைமைச் செயலாளருக்கும், முதல்வரின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கும் அறிக்கை அளிப்பார்கள்.
இந்த 6 பேரும் தான் அரசை வழி நடத்தி செல்லும் பொறுப்பை ஏற்றுள்ளனர் என அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். மேலும் இவர்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து செல்வதாகவும் கூறப்படுகிறது. மேலும், மூத்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோர் பெரும்பாலான நேரத்தை மருத்துவமனையிலேயே செலவிடுகின்றனர்.