Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’யாராக இருந்தாலும் ஓட ஓட விரட்டுவோம்’ - கொந்தளித்த கருணாநிதி

’யாராக இருந்தாலும் ஓட ஓட விரட்டுவோம்’ - கொந்தளித்த கருணாநிதி
, திங்கள், 13 ஜூன் 2016 (14:31 IST)
தமிழ்நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 

 
திமுக மருத்துவ அணி செயலாளர் பூங்கோதை இல்ல திருமண விழாவில், திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்று தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
 
பின்னர் அவர் பேசும்போது, ”மீண்டும் தமிழ்நாட்டில், இந்தியாவில் சமஸ்கிருதம் தலைதுhக்குமா? வடமொழி நம்மீது படையெடுக்குமா என்ற அந்தக் கேள்விக் குறி நமக்கு ஏற்பட்டுள்ள நேரத்தில் இங்கே நாம் குழுமியிருக்கிறோம் என்பதை மறந்து விடக் கூடாது. வட மொழிக்கு ஆதிக்கம், சமஸ்கிருதத்திற்கு ஆதிக்கம் என்றெல்லாம் பேசப்படுகின்ற காலம் ஏற்பட்டுள்ளது.
 
தூய தமிழ் மொழிக்குத் தான் செல்வாக்கு, தூயத் தமிழ் மொழி தான் நம்முடைய வாழ்க்கையிலே இருக்க வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்தில் சமஸ்கிருதத்தை பாட மொழியிலே சேர்க்கிறோம் என்று சொல்கின்ற பைத்தியக்காரர்களும் நாட்டிலே இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது. வடமொழி எப்படி எல்லாம் ஆளுங்கட்சி மூலமாக அல்லது ஆளுங்கட்சிக்காரர்களின் ஆதரவோடு, ஆசியோடு நுழைவதற்கு இடம், நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
ஆகவே தான் நான் கூறுகிறேன். சோம சுந்தர பாரதியார் சொல்வார் - "சமஸ்கிருதம்" என்று கூடச் சொல்ல மாட்டார், "சஞ்சிகிரதம்" என்று தான் சொல்வார். அப்படி இழித்துரைக்கப்பட்ட ஒரு மொழி, சமஸ்கிருத மொழி - வட மொழி. அந்த வடமொழிக்கு தமிழ்நாட்டில் ஆதிக்கமா என்ற கேள்வி பிறப்பதற்கு முன்பு, வடமொழியைத் திணிக்க விரும்பு கின்ற மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, தங்களுடைய மொழியைப் பரப்ப விரும்புகின்ற இந்த அநியாயத்தை இப்போதே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 
இல்லாவிட்டால், வடமொழியை எதிர்த்து, சமஸ்கிருதத்தை எதிர்த்து ஒரு பெரும் கிளர்ச்சி உருவாகும். எப்படி கட்டாய இந்தியை எதிர்த்து தமிழ்நாட்டில் உருவாயிற்றோ, அதைப் போல வட மொழி சமஸ்கிருதத்தை எதிர்த்து ஒரு கிளர்ச்சி தமிழ்நாட்டில் உருவாவதற்கு யாரும் காரணமாகி விடக் கூடாது என்பதை நான் இந்த நேரத்தில் சொல்ல விரும்புகிறேன்.
 
தமிழ்நாட்டில், தமிழ் மொழிக்கு இருந்த மூவேந்தர் காலந்தொட்டு இருந்து அதனுடைய மூப்பு, அதனுடைய மொழி ஆதிக்கம், அந்த மொழிக்கு இருந்த செல்வாக்கு, அதைக் கையாண்ட மூவேந்தர்களின் பரம்பரை, அந்தப் பரம்பரையை எல்லாம் ஒழித்துக் கட்டி விட்டு, நாங்கள் தமிழுக்கு இடம் தர மாட்டோம், வட மொழிக்குத் தான் இடம் தருவோம் என்று சொல்வார்களானால், கையில் தமிழன் ஒவ்வொருவரும் "சவுக்கை" எடுத்துக் கொண்டு வடமொழி ஆதிக்கத்தை வேரறுக்கக் கிளம்ப வேண்டும்.
 
அதைத் தான் ஆலடி உயிரோடு இருந்திருப்பாரேயானால், எனக்கு அதைத் தான் யோசனையாகச் சொல்வார். அப்படிப்பட்ட வீரர், அப்படிப்பட்ட கொள்கைவாதி, அப்படிப்பட்ட மொழிப் பற்றாளர், அந்த ஆலடி அருணாவின் இல்ல விழாவில் தான் நாம் இங்கே கூடியிருக்கிறோம். பல ஆலடி அருணாக்கள் தமிழகத்தில் உருவாக வேண்டும். அப்படி உருவாகின்ற ஆலடி அருணாக்கள் வடமொழி ஆதிக்கத்தை வீழ்த்த ஒன்று திரளுவார்கள்.
 
அதற்கு நாம் துணை போக வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, இந்த மணவிழாவில் நாம் எடுத்துக் கொள்ளும் வீர சபதமாக வட மொழி ஆதிக்கத்திற்கு இடம் தர மாட்டோம், சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம்” என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் வருகிற வியாழன் வெள்ளி கிழமைகளில் மழை பெய்யும்